உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சொந்த மண்ணில் 1-2 எனத் தோற்றது அவுஸ்திரேலிய அணி. அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவில் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருந்தது. இதற்கான ஆஸி. அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. எனினும் கொரோனா அச்சுற்றுதல் காரணமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்படுவதாக கிரிக்கெட் அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இந்த டெஸ்ட் தொடரை 2-0 என வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதிச்சுற்றுக்கு அவுஸ்திரேலிய அணியால் தகுதி பெற முடியும். தற்போது தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இதனால் அவுஸ்திரேலிய அணியால் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறுவது கடினமாகிவிட்டது.
இந்நிலையில் நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முதல் நாடாகத் தகுதி பெற்றுள்ளது. நியூசிலாந்து அணி தகுதி பெற ஒரு அணியைத் தவிர வேறு எந்த அணியும் 70.0% புள்ளிகள் பெறக்கூடாது. இதன் அடிப்படையில் இறுதிச்சுற்றுக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றுள்ளது.
இதனால் இந்தியா – இங்கிலாந்து தொடர் அரையிறுதி போல ஆகிவிட்டது. இந்திய அணி குறைந்தது 2 வெற்றிகளுடன் டெஸ்ட் தொடரை வென்றால் இறுதிச்சுற்றில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும்.
இங்கிலாந்து அணி 3-0, 3-1 அல்லது 4-0 என இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றால் அந்த அணி இறுதிச்சுற்றில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடும்.
இந்தியாவும் இங்கிலாந்தும் அதுபோல வெற்றி பெறாவிட்டால் அல்லது தொடர் டிரா ஆனால் அவுஸ்திரேலிய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: சதவீதப் புள்ளிகள்
இந்தியா: 71.7%
நியூசிலாந்து: 70.0%
அவுஸ்திரேலியா: 69.17%
இங்கிலாந்து: 65.2%