ராமாவரம் எம்ஜிஆர் தோட்டத்தின் நுழைவாயில் அருகே கட்சி கொடிக் கம்பம், கல்வெட்டு மற்றும் பேனர் வைக்கத் தடை கோரி உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் வளர்ப்பு மகள்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் வளர்ப்பு மகள்களான கீதா, ராதா ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், அமமுக கட்சியின் மாவட்ட செயலாளர் ராமாவரம் எம்ஜிஆர் தோட்டத்தின் நுழைவு வாயில் பகுதியில் எங்களது அனுமதி இல்லாமல் ஆக்கிரமித்து அக் கட்சியின் கொடிக் கம்பம் அமைப்பதற்கான கட்டுமானங்களை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இந்நிலையில் மீண்டும் எம்ஜிஆர் தோட்ட இல்லத்தின் நுழைவு வாயில் பகுதியில் நடைபாதை, சுற்றுச்சுவர் பகுதியை ஆக்கிரமித்து அமமுக கொடிக்கம்பம் அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
உயர்நீதிமன்றம் ஏற்கெனவே தமிழகம் முழுவதும் உரிய அனுமதி இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிட்டுள்ளது. எனவே ராமாவரம் எம்ஜிஆர் தோட்டத்தின் நுழைவுவாயில் அருகே கட்சி கொடிக் கம்பம், கல்வெட்டு மற்றும் பேனர் வைக்கத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர்.
இந்த நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாரயணன், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் தலைமையிலான அமர்வு முன் ஆஜரான வழக்குரைஞர் இளங்கோ, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணை எடுக்க கோரி முறையிட்டார்.
வழக்கை வரும் திங்கள்கிழமை (பிப்.8) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.