அவதூறான புகார்கள் வேதனை அளிப்பதாக இருப்பதாக நடிகை சன்னி லியோன் தெரிவித்துள்ளார். பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார், நடிகை சன்னி லியோன். 2012 ஆம் ஆண்டு பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார்.
தொடர்ந்து ஜாக்பாட், ராகினி எம்.எம்.எஸ் 2, ஹேட் ஸ்டோரி 2 உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் மதுரராஜா என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்திருந்தார். தமிழில், ஜெய், ஸ்வாதி நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்த சன்னி லியோனுக்கு இந்தியா முழுவதும் எக்கச்சக்க ரசிகர்கள். சமூக வலைதளங்களில் வெளியிடும் போட்டோக்களால் எப்போதும் பரபரப்பாகவே இருந்து வருகிறார்.
டிவி நிகழ்ச்சி ஒன்றின் படப்பிடிப்புக்காக சன்னி லியோன், கேரளாவுக்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். அங்குள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று புகைப்படங்கள் எடுத்து அவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். இதற்கு லைக்ஸ்களும் கமென்ட்களும் பறக்கின்றன.
இந்நிலையில் கேரள மாநிலம் பெரும்பாவூரைச் சேர்ந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஸ்ரீயாஸ் என்பவர் கேரள டிஜிபியிடம் நடிகை சன்னி லியோன் மீது பண மோசடி புகார் அளித்தார். அதில், ‘சன்னி லியோன் கடைத்திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஒப்பந்தம் செய்தேன். இதற்காக ரூ.29 லட்சம் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு முதல் அவருடைய மானேஜருக்கு பல கட்டங்களாகப் பணம் அளிக்கப்பட்டுள்ளது. பணத்தைப் பெற்றுக்கொண்ட சன்னி லியோன், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். இதையடுத்து கேரள குற்றப்பிரிவு போலீசார், திருவனந்தபுரத்தில் தனியார் சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் சன்னி லியோனிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், தனது புகாரை மறுத்துள்ள சன்னி லியோன் கூறியிருப்பதாவது: ஒரு நடிகையாக வேலையை நான் மதிக்கிறேன். அதைத் தவிர வேறொன்றுமில்லை. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் எனது கால்ஷீட்டை பலமுறை மாற்ற வேண்டியிருப்பதைப் புரிந்து கொள்கிறேன். ஆனால், அவர்கள் சொன்ன தேதியில் நிகழ்ச்சியை நடத்தமாட்டார்கள்.
நடிகரின் நேரத்தை சொல்லிவிட்டு, அட்வான்ஸ் கூட கொடுக்க மாட்டார்கள். ஒரு நிகழ்ச்சிக்கு வருவதாக நான் தேதி கொடுத்திருந்தால் செல்லாமல் இருக்கமாட்டேன். ஆனால், பணம் கொடுக்காததால் கால்ஷீட்டை முடிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனக்கு மற்ற வேலைகள் இருந்தன.
நாங்கள் இரவு பகலாக படப்பிடிப்பில் பங்கேற்றுக் கொண்டிருக்கிறோம். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் இதுபோன்ற அவதூறான புகார் மற்றும் முறையற்ற நடத்தைகளால் ஆழ்ந்த வேதனை ஏற்படுகிறது. நான் ஏற்கனவே போலீசாரிடம் விளக்கம் அளித்துவிட்டேன். இனி சட்டம் தன் கடமையை செய்யட்டும். இவ்வாறு சன்னிலியோன் கூறியுள்ளார்.