நடிகர் – அன்பு மயில்சாமி
நடிகை – நீரஜா
இயக்குனர் – சிவபாலன்
இசை – கார்த்திக் ராஜா
ஒளிப்பதிவு – ஆர்.வேலு
மாஸ்டர் மகேந்திரனும், அன்பு மயில்சாமியும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். மகேந்திரன் ஆட்டோ ஓட்டி அன்பு மயில்சாமியை படிக்க வைக்கிறார். இதே ஊரில் பெரிய தாதாவாக இருக்கும் சூப்பர் சுப்புராயன் சிலைகளை கடத்தி விற்பனை செய்கிறார்.
இதை மகேந்திரன் போலீசிடம் சொல்லி சூப்பர் சுப்புராயனை சிக்க வைத்து விடுகிறார். இதனால் கோபமடையும் சுப்பர் சுப்புராயன், மகேந்திரனை கொலை செய்ய நினைக்கிறார். இந்நிலையில் அன்பு மயில்சாமி, சூப்பர் சுப்புராயன் மகள் நீரஜாவை காதலிக்கிறார்.
சூப்பர் சுப்புராயனுக்கும், மகேந்திரனுக்கும் பிரச்சனை இருப்பதை அறிந்து நீரஜாவை காதலிக்க மறுக்கிறார் அன்பு மயில்சாமி. ஆனால், மகேந்திரன் நண்பனின் காதலை சேர்த்து வைக்க முடிவு செய்கிறார். இறுதியில், தன்னை கொல்ல நினைக்கும் தாதா சூப்பர் சுப்புராயனை எதிர்த்தாரா? அல்லது சமரசமாகி நண்பன் காதலுக்கு உதவினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகன்களாக நடித்திருக்கும் மகேந்திரன் மற்றும் அன்பு மயில்சாமி இருவரும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். ஆட்டோ ஓட்டுநராகவும், நண்பனுக்காக பேசும்போதும் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் மகேந்திரன். நண்பனுக்காக காதலை மறுக்கும் அன்பு மயில்சாமியின் நடிப்பில் ஏதோ குறைவது போல் உள்ளது. கல்லூரி மாணவியாக வரும் நீரஜா, மகேந்திரனின் காதலியாக வரும் காயத்ரி ஆகியோரின் நடிப்பு செயற்கை தனமாக இருக்கிறது. வில்லனாக நடித்திருக்கும் சுப்பர் சுப்புராயன் நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.
உயிருக்கு உயிரான இரண்டு நண்பர்கள், இவர்களுக்குள் ஏற்படும் பகை, காதல் ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் சிவபாலன். ஆனால், சுவாரஸ்யம் இல்லாமல் திரைக்கதை தடுமாறி இருக்கிறது. தேவையில்லாத காட்சிகள், மற்ற படங்களில் வரும் வழக்கமான காட்சிகள் ஆகியவை படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. கதாபாத்திரங்களிடையே வேலை வாங்காமல் விட்டிருக்கிறார் இயக்குனர்.
கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் படத்திற்கு பலம். குறிப்பாக இளையராஜா பாடிய பாடலும், காதல் இனிக்குதையா பாடலும் மீண்டும் கேட்கும் ரகம். ஆர்.வேலுவின் ஒளிப்பதிவை ரசிக்க முடிகிறது. பல இடங்களில் இவரது ஒளிப்பதிவு பளிச்சிடுகிறது.
மொத்தத்தில் ‘சிதம்பரம் ரயில்வேகேட்’ சுவாரஸ்யம் இல்லை.