பாலிவுட் நடிகர் சந்தீப் நாஹர் (30) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக அவர் வெளியிட்ட விடியோவில் மனைவியுடனான சண்டையால் விரக்தியடைந்து இந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.
இதுதொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை கூறியது: நடிகர் அக்ஷய் குமாரின் கேசரி, சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்து வெளியான எம்.எஸ்.தோனி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் சந்தீப் நாஹர். மும்பை புறநகர் பகுதியான கோரேகானில் உள்ள அவரது வீட்டில் திங்கள்கிழமை மாலை சந்தீப் நாஹர் தனது படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். அதைப் பார்த்த அவரது மனைவி மற்றும் நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, சந்தீப் நாஹர் ஒரு விடியோவையும், தற்கொலை குறிப்பையும் முகநூலில் வெளியிட்டிருந்தார். அதில், மனைவியுடன் தொடர்ந்து சண்டையிட்டதால் விரக்தியடைந்ததாகவும் தன்னை மனைவியும் மாமியாரும் துன்புறுத்தி மிரட்டியதாகவும் கூறியுள்ளார். அவர் எழுதியுள்ளதாகக் கூறப்படும் தற்கொலை கடிதத்தில் பாலிவுட்டில் தான் எதிர்கொண்ட அரசியல் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் யாரும் புகார் அளிக்காத நிலையில், முதல்கட்ட தகவலின் அடிப்படையில் தற்செயல் மரணம் என கோரேகான் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.