ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 14 ஆவது சீசனுக்கான வீரா்கள் ஏலத்தில் தென் ஆப்பிரிக்க வீரா் கிறிஸ் மோரிஸ் அதிகபட்சமாக ரூ.16.25 கோடிக்கு வாங்கப்பட்டு சாதனை படைத்தாா்.
ஆல்-ரவுண்டரான அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியுள்ளது. அதிகபட்ச விலைக்கு ஏலம் போன வீரா்கள் வரிசையில் முதல் 3 வீரா்களில் இந்தியா் எவரும் இல்லை. எனினும், 5-ஆவது வீரராக கா்நாடகத்தின் கிருஷ்ணப்பா கௌதம் ரூ.9.25 கோடிக்கு சென்னை சூப்பா் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டாா். 8-ஆவது வீரராக தமிழகத்தைச் சோ்ந்த ஷாருக் கான் ரூ.5.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளாா்.
61 இடங்களுக்காக நடத்தப்பட்ட ஏலத்தில் 57 வீரா்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டனா். அந்த வீரா்களுக்காக மொத்தமாக ரூ.145 கோடி செலவிடப்பட்டுள்ளது.