செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சிக்காக நாசாவின் விடாமுயற்சியாக 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அனுப்பப்பட்ட பெர்சவரனஸ் ரோவர் விண்கலம் வெற்றிகரமாக பாதுகாப்பாக தரையிறங்கிய நிலையில், முதல் புகைப்படத்தை எடுத்து அனுப்பியுள்ளது.
2020 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி நாசா விஞ்ஞானிகள் பெர்சவரனஸ் ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பினர். இந்த விண்கலம் செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது.
இந்நிலையில், நாசா அனுப்பிய பெர்சவரனஸ் ரோவர் விண்கலம் 7 மாத பயணங்களுக்கு பின்னர் வெற்றிகரமாக செவ்வாய்கிரகத்தை அடைந்த நிலையில், அதன் சுற்றுவட்டபாதையில் சுற்றி வந்தது. பின்னர் விண்கலத்தில் இருந்து ரோபோட்டிக் ரோவர், இந்திய நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஜெசிரோ பள்ளத்தில் தரையிறங்கியது.
சாஃப்ட் லேண்டிங் முறையில் பாராசூட்டை பயன்படுத்தி ரோவரை விஞ்ஞானிகள் தரையிறங்கினர். இதன் பின்னர் முதல் புகைப்படத்தை எடுத்து நாசாவுக்கு அனுப்பியது. நாசாவின் விடாமுயற்சியாக அனுப்பப்பட்ட பெர்சவரனஸ் ரோவர் விண்கலம் பாதுகாப்பாக தரையிறங்கி புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளதாக நாசா சுட்டுரையில் தெரிவித்துள்ளது.
செவ்வாயில் ரோபோட்டிக் ரோவர் தரையிறங்கியதை கண்காணித்த நாசா விஞ்ஞானிகள் கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
நான் செவ்வாய் கிரகத்தில் பாதுகாப்பாக இருக்கிறேன். உங்களின் விடாமுயற்சிக்கு வாழ்த்துகள் என்று நாசாவின் மார்ஸ் ரோவரின் சுட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து செயல் நிர்வாகி ஸ்டீவ் ஜுர்சிக் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், செவ்வாய் கிரகத்தில் ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளது. அதற்காக கரோனா தொற்று கால கஷ்டங்களையும் கடந்து விடாமுயற்சியுடன் அற்புதமாக பணியாற்றிய குழுவுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.
இதன் வெற்றியை பொறுத்து மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்பும் திட்டத்தை நாசா திட்டமிடும் என தெரிகிறது.
இந்த மாதத்தில் மட்டும் ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளின் விண்கலங்கள் செவ்வாய் கிரகத்தை அடைந்துள்ளன.
மேலும் நாசா அனுப்பிய பெர்சவரன்ஸ் விண்கலத்தின் ரோவர் பகுதி ஆய்வில் முக்கிய பங்காற்றிய இந்தியாவைச் சேர்ந்த அமெரிக்க வாழ் நாசா விஞ்ஞானி டாக்டர் சுவேதா மோகனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.