பிரபல தொழிலதிபரும் தயாரிப்பாளருமான அசோக் கென, திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இந்தப் படத்தில் திப்பு சுல்தான் வேடத்தில் நடிக்க ரஜினியை அணுகியுள்ளார் அசோக் கெனி. கன்னடத்தில் அர்ஜூனை வைத்து பிரசாத் என்ற படத்தைத் தயாரித்த அசோக், இப்போது நானே பாரி நீனு என்ற படத்தைத் தயாரித்துள்ளார்.
திப்பு சுல்தான் படத்தை தனது கனவுப் படமாக எடுக்கப் போவதாக கூறும் அசோக் கெனி, இந்தப் படம் குறித்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பே ரஜினியிடம் பேசியிருக்கிறார். ஆனால் அப்போது ரஜினிக்கு உடல் நிலை சரியில்லாததால், விஷயத்தை தள்ளிப் போட்டுவிட்டார்.
இதுகுறித்து அசோக் கூறுகையில், “திப்பு சுல்தானின் பெருமைகளில் பல இன்னும் உலகறியாதது. அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாஷிடங்டனுக்கு கப்பல்களைப் பரிசாகத் தந்த பெருமைக்குரியவன் திப்பு சுல்தான். இந்தக் காட்சியில் ரஜினி நடித்து, அது உலகெங்கும் திரையிடப்பட்டால் திப்புவுக்கும் அவன் ஆண்ட இந்த மண்ணுக்கும் எத்தனைப் பெருமை சேரும் என்பதை நினைத்துப் பார்த்தாலே பரவசமாக உள்ளது.
இந்த திரைப்படம் தொடர்பாக விரைவில் ரஜினியைச் சந்தித்துப் பேசவிருக்கிறேன். ராஜமவுலி மாதிரி ஒரு படைப்பாளி இந்தப் படத்தை இயக்க வேண்டும் என்று விரும்புகிறேன்,” என்றார்.