கடலூரில் தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டபோது மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னம் அச்சிட்ட பனியன், சில்வர் பாத்திரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்கிறது இந்து தமிழ் திசை நாளிதழ். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம்.
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து பறக்கும் படையினர் மற்றும் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று கடலூரில் நிலையான கண்காணிப்பு குழுவினர் கடலூர் அருகே பெரியக்காட்டுப்பாளயம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த மினிலாரியை நிறுத்தி சோதனை செய்ததில், ரூ.1 லட்சம் மதிப்பிலான மக்கள் நீதி மய்யம் கட்சியின் சின்னம் மற்றும் புதுச்சேரிக்கு உள்பட்ட ஏம்பலம் தொகுதி வேட்பாளர் பெயர் அச்சிடப்பட்ட பனியன், மற்றும் சில்வர் பாத்திரங்கள் ஆகியவை இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் அனைத்து பொருட்களையும் பறிமுதல் செய்து கடலூர் வட்டாட்சியர் பலராமனிடம் ஒப்படைத்தனர் என்கிறது அந்தச் செய்தி.