ஆர்யா, கிருஷ்ணா, தீபாசன்னதி, சுவாதி ஆகியோர் நடித்து, விஷ்ணுவர்தன் டைரக்ஷனில், யு.டி.வி. நிறுவனம் தயாரித்து வெளிவர இருக்கும் படம், ‘யட்சன்.’ இந்த படத்தை பற்றி நிருபர்களுக்கு ஆர்யா பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு ஆர்யா அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- விஷ்ணுவர்தன் டைரக்ஷனில் தொடர்ந்து 5 படங்களில் நடித்து இருக்கிறீர்களே, அந்த அனுபவம் பற்றி கூற முடியுமா?
பதில்:- விஷ்ணுவர்தனுக்கும், எனக்கும் இடையே உள்ள நட்புதான் அதற்கு காரணம். ஆனால், படப்பிடிப்பின்போது நண்பன் என்பதை அவர் காட்டிக்கொள்ள மாட்டார். ஒரு டைரக்டராக நடந்து கொள்வார். ‘பட்டியல்’ படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில், என்னை ஒரு பெரிய பாலத்தில் இருந்து ஆற்றில் குதிக்க சொன்னார். நான் தயங்கினேன். உடனே, ‘‘நான் குதித்துக் காட்டட்டுமா?’’ என்று விஷ்ணுவர்தன் கேட்டார். அடுத்த நிமிடம் நானே குதித்து விட்டேன்.
கேள்வி:- நெருக்கமான காதல் காட்சிகளிலும் விஷ்ணுவர்தனே நடித்துக்காட்டுவாரா?
பதில் (சிரித்தபடி):- எப்படி கண்டுபிடித்தீர்கள்? காதல் காட்சிகளில், அவர் நடித்துக்காட்டியபின்தான் என்னை நடிக்க வைப்பார்.
கேள்வி:- இந்த பட கதாநாயகி தீபாசன்னதிக்கு உங்கள் வீட்டில் பிரியாணி விருந்து கொடுத்து விட்டீர்களா?
பதில்:- இன்னும் அவர் பிரியாணி விருந்து சாப்பிடவில்லை. படப்பிடிப்பின்போது அவரை பேச வைத்ததே பெரிய விஷயம். இவருக்கு நேர் எதிரானவர், சுவாதி. வாயாடி. இரண்டு பேருக்கும் இடையே சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பார்க்க முயற்சி செய்தோம். நடக்கவில்லை. இருவருமே தோழிகளாகி விட்டார்கள்.
கேள்வி:- வீட்டில், உங்களுக்கு பெண் பார்ப்பதாக பேச்சு வந்ததே?
பதில்:- அந்த கஷ்டத்தை நான் என் பெற்றோர்களுக்கு கொடுக்க மாட்டேன். காதல் திருமணம்தான் செய்து கொள்வேன். அதற்கு என் பெற்றோர்களும் சம்மதிப்பார்கள். எனக்கு மணமகளாக வரப்போகிறவர் நடிகையாக இருப்பாரா அல்லது வேறு ஒரு பெண்ணா? என்பதை முடிவு செய்யவில்லை.
கேள்வி:- நயன்தாராவுக்கு பரந்த மனதுடன், ‘‘எங்கிருந்தாலும் வாழ்க’’ என்று சொல்லியிருக்கிறீர்களே?
பதில்:- இப்போதும் சொல்கிறேன். அவர் எங்கிருந்தாலும் வாழ்க. அவருடைய திருமணத்தில் நான் நிச்சயமாக கலந்து கொள்வேன்.’’இவ்வாறு ஆர்யா கூறினார்.