நியூசிலாந்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஃபின் ஆலனை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தேர்வு செய்துள்ளது.
கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. எனினும் இந்த வருட ஐபிஎல் போட்டி ஏப்ரல் 9 முதல் மே 30 வரை இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூரு ஆகிய ஆறு இடங்களில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. எனினும் கரோனா தொற்று அச்சம் காரணமாக, முன்னெச்சரிக்கையாகத் தொடக்க நிலை ஆட்டங்களில் ரசிகா்களுக்கு அனுமதி அளிப்பதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலியாவின் ஜோஷ் பிலிப்பி, சொந்தக் காரணங்களுக்காக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதையடுத்து அவரைப் போலவே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக உள்ள நியூசிலாந்தின் ஃபின் ஆலனை ஆர்சிபி அணி தேர்வு செய்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சூப்பர் ஸ்மேஷ் போட்டியில் 512 ரன்கள் குவித்த ஆலன், அதிகபட்சமாக 25 சிக்ஸர்களை அடித்தார். இதையடுத்து கப்திலின் மாற்று வீரராக நியூசிலாந்து டி20 அணிக்கும் தேர்வானார்.
இதுவரை சர்வதேச ஆட்டங்களில் விளையாடவில்லையென்றாலும் அதிரடி வீரராகவும் விக்கெட் கீப்பராகவும் உள்ளதால் 21 வயது ஃபின் ஆலனை ஆர்சிபி அணி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.