தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டு கலைஞரின் ‘டாட்டூ’ காயங்களிலிருந்து குணமாக்கும். ஆனால், இதில் மருத்துவ குணமில்லை. வன்முறைகளில் தாக்கப்பட்ட பெண்களுக்கெதிரான கொடுமையின் வடு ஒவ்வொரு முறையும் அந்த சம்பவத்தை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும்.
இதை மறக்கடிக்கும் மருந்தாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இதுபோன்ற அழியாத தழும்புடன் வரும் பெண்களுக்கு வண்ணங்கள் நிறைந்த கனவைப் போல… இலவச டாட்டூ போடுகிறார் ஃபிலவியா கார்வால்ஹோ.
ஆண்களால் கத்தி மற்றும் துப்பாக்கி குண்டடிப்பட்டவர்களுக்கு மட்டுமல்லாது புற்றுநோயால் பாதிப்படைந்து, அதிலிருந்த மீண்ட பெண்களுக்கும் ஃபிலவியா இதுபோல டாட்டூக்களை போடுகிறார்.
ஒருமுறை ஆசைக்கு இணங்க மறுத்த ஒரு பெண்ணின் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார் ஒரு ஆண். அந்த தழும்பை மறைக்க வேண்டி இரண்டாண்டுகளுக்கு முன் அந்தப் பெண் ஃபிலவியாவைச் சந்தித்தார்.
ஃபிலவியா போட்ட டாட்டூவைப் பார்த்து அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இந்த சம்பவம் தன்னை ஆழமாக பாதித்ததால் தாக்குதல்களுக்கு உள்ளான பெண்களுக்கு இதுபோல இலவசமாக டாட்டூ போட தொடங்கியதாக ஃபிலவியா தெரிவித்தார்.
இந்தத் திட்டத்துக்கு ‘பூவின் மேற்புறம்’ எனப் பெயரிட்டுள்ளார் ஃபிலவியா. அவர் வரையும் ஒவ்வொரு டாட்டூவும் இப்பெண்களுக்கு உந்துசக்தியாகவும், சுய மரியாதையின் சின்னமாகவும் விளங்கட்டும்!