செங்கோட்டை அருகே ஷேர் ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் திட்டமிட்ட படுகொலையா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்திற்குக் காரணமான லாரி ஓட்டுநரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழக கேரளா எல்லை பகுதியான திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை வழியாக தினமும் கேரளா நோக்கி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. நேற்று காலை செங்கோட்டையிலிருந்து புளியரைக்கு கற்குடியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் கருப்பசாமி தனது ஷேர் ஆட்டோவில் அடிவெட்டி, அவரது மகன் மகேஷ் ஆகியோரை ஏற்றிக்கொண்டு புளியரை காவல் நிலையத்தில் நிபந்தனை ஜாமீன் கையெழுத்து போடுவதற்கு சென்றுள்ளார்.
அப்போது கட்டளைக் குடியிருப்பில் இருந்து 2 பெண்கள், உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற புளியரையிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்வதற்காக அதே ஆட்டோவில் ஏறியுள்ளனர். இதே போல் மேலப்புதூர் பகுதியை சார்ந்த முருகன் என்பவரும் புளியரை செல்வதற்காக மேலபுதூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஆட்டோவில் ஏறியுள்ளார்.
2 பெண், 3 ஆண்களை ஏற்றிக்கொண்டு புளியரை நோக்கி ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது புதூர் என்ற பகுதியின் அருகே சென்ற போது, கேரளாவிலிருந்து செங்கோட்டையை நோக்கி வந்த லாரி ஒன்று ஆட்டோவின் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோவின் முன் பகுதி சுக்கு நூறாகி அப்பளம் போல் நொறுங்கியது. ஆட்டோ ஓட்டிய கருப்பசாமி வயல் வரப்பில் தூக்கி வீசப்பட்டு பலியானார்.
அப்படியிருந்தும் லாரியின் வேகம் குறையாமல் சில நூறு அடி ஆட்டோவை இழுத்துச் சென்றதில் ஆட்டோவில் பயணித்த அடிவெட்டி, முருகன், மற்றும் 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து பலியாயினர். ஆட்டோவில் இருந்த மகேஷ் என்பவர் படுகாயமடைந்தார். உடனடியாக காயமடைந்த மகேசை மீட்கப்பட்டு நெல்லை மாவட்ட மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.