பெங்களூருவில் தான் வளர்த்து வந்த செல்ல நாய்களுக்காக பெண் ஒருவர் கட்டிய கணவரை உதறிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் உள்ள எச்.எஸ்.ஆர் லே அவுட்டை சேர்ந்தவர் அக்கணவர். இவர் பெங்களூருவில் உள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கும் கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த பொறியாளரான இளம்பெண் ஒருவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தால் இருவீட்டாரும் சந்தோஷத்தில் திளைத்தனர்.
சீர்வரிசையாக வந்த நாய்கள்:
திருமணம் முடிந்த கையோடு அப்பெண் தன் பிறந்த வீட்டு சீர்வரிசைகளுடன் கணவர் வீட்டுக்கு வந்தார். அப்போது அவருடன் இரண்டு லேப்ரடர் இனநாய்களும் வந்தன. இந்த நாய்களை பார்த்ததும் இது மணமகன் குடும்பத்தாருக்கு கொஞ்சம் நறுக்கென்று இருந்தது.ஆனாலும், பொறுத்துக் கொண்டனர்.
படுத்த ஆரம்பித்த செல்லப் பிராணிகள்:
ஆனால் நாட்கள் வாரங்கள் ஆகி வாரங்கள் மாதங்கள் ஆனபோதும் நாய்கள் தங்கி இருந்தன. இருந்தாலும் புதுமண தம்பதிகளிடம் இதனால் ஒரு பிரச்சினை ஏற்பட வேண்டாம் என்று பையன் குடும்பத்தினர் அதுபற்றி எதுவும் கேட்கவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல செல்லப்பிராணிகள் அந்த வீட்டின் உறுப்பினர்களாக மாறத் தொடங்கிவிட்டன.
அதிர்ச்சியில் குடும்பத்தினர்:
அதன் பிறகுதான் பெண்ணின் அந்த செல்ல நாய்களும் அவருடன் வாழ வந்து இருக்கின்றன என்பது பையனின் குடும்பத்தினருக்கு தெரிய வந்தது. இது குடும்பத்தாரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.
வெளில போய் படுங்க:
ஒரு கட்டத்தில் நாய்களும் நம்மோடு படுக்கையை பகிர்ந்து கொள்கிறதே என்று மிகவும் வெறுப்படைந்த கணவன், மனைவியிடம் ‘‘நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டும். நாய் வேண்டுமா? இல்லை நான் வேண்டுமா”? என்று கேட்டுள்ளார். அதற்கு ‘‘என் செல்ல நாய்கள் என்னுடன் தான் இருக்கும். நீங்கள் வேண்டுமானால் வெளியே சென்று தூங்குங்க” என்று சாதாரணமாக கூறி அதிர்ச்சி அளித்து உள்ளார்.
நாய்கள்தான் எனக்கு முக்கியம்:
இதனால் நிலைமை விபரீதமாக செல்வதை உணர்ந்த கணவர் குடும்பத்தினர் இதுகுறித்து பெங்களூரு கிழக்கு மண்டல போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். இதன்பேரில் போலீசார் அப்பெண்ணை அழைத்து விசாரித்து உள்ளனர். அதற்கு அவர் தெளிவாக, ‘‘இந்த நாய்கள் தான் எனக்கு முக்கியம். நாய்களை நான் திருப்பி அனுப்ப முடியாது” என்று கூறியுள்ளார்.
பிடிவாதமான பெண்:
அப்பெண்ணுக்கு இரண்டு மூன்று முறை மனோதத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. ஆனாலும் நாய்களை திரும்பவும் தனது தாய் வீட்டுக்கு அனுப்ப முடியாது என்று அஞ்சலி பிடிவாதமாக கூறிவிட்டார். கணவரை பிரிந்தாலும் பிரிவேனே தவிர நாய்களை பிரியமாட்டேன் என்று உறுதியாக தெரிவித்துவிட்டார்.