பிரதமர் நரேந்தி மோடி, ‘ஏழைகளிடம் கனவை காண்பித்து, பொய் பேசி, அவர்களை ஒருவருக்கு ஒருவர் மோத செய்து ஆள வேண்டும்,’ என கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவில் பிரதமர் இந்தி மொழியில் உரையாற்றும் காட்சிகள் இடம்பெற்று இருக்கின்றன.
வைரல் வீடியோவை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரோஹன் குப்தா தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார். இவரது பதிவிற்கு பலரும், வீடியோ மிக சிறியதாக உள்ளது என கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.
பிரதமர் மோடி பேசிய வீடியோவை ஆய்வு செய்ததில், அவர் காங்கிரஸ் கட்சியை வன்மையாக கண்டித்து பேசினார் என்பது தெரியவந்துள்ளது. ஆட்சியில் இருக்க காங்கிரஸ் கட்சி இதுபோன்ற காரியங்களை தந்திரமாக பயன்படுத்துகிறது என பிரதமர் மோடி கூறி இருக்கிறார்.
உண்மையில் இந்த வீடியோ மார்ச் 21 ஆம் தேதி அசாம் மாநிலத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றிய போது எடுக்கப்பட்டது ஆகும். அசாம் மாநிலத்தில் மார்ச் 27 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. பலகட்டங்களாக நடைபெறும் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நிறைவுபெறுகிறது.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் பரப்புரையில் எடுக்கப்பட்ட வீடியோ, சிறு பகுதி மட்டும் தவறான தலைப்பில் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. அந்த வகையில் பிரதமர் மோடி ஏழைகள் பற்றி அவ்வாறு கருத்து கூறவில்லை என்பது உறுதியாகிவிட்டது.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.