திரைப்படத்துறை சார்பில் பல்வேறு சங்கங்கள் உள்ளன. இந்தியா முழுவதும் 35 கூட்டமைப்புகள் இயங்கி வருகின்றன. என்றாலும் இதில் இருப்பவர்கள் பயிற்சி பெறவும், திறனை மேம்படுத்தவும் சரியான கட்டமைப்பு இல்லை என்ற குறைபாடு உள்ளது.
இதை நீக்கும் வகையில் திரைப்பட தொழிலாளர்களுக்கு 3 நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. அகில இந்திய அளவில் தொழிலாளர்கள் பங்கேற்கும் இந்த பயிற்சி வகுப்பில் நமது நாட்டில் உள்ள திரைத் துறை நிபுணர்கள், சர்வதேச தொழில்நுட்ப கலைஞர்கள், பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள்.
இந்த பயிற்சி வகுப்பு நவம்பர் மாதம் 2–வது வாரம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் திரைத்துறை தொழிலாளர்களுக்கு அவர்கள் பயிற்சி பெறும் 3 நாட்களுக்கும் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கப்படும் என்று திரைப்பட சங்கம் அறிவித்துள்ளது.
ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு திறன் சபை தலைவர் கமலஹாசன் வழிகாட்டுதலின்படி இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஜி.சிவா இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.
திரைப்பட தொழிலாளர்களுக்கு அடிப்படை பயிற்சி அளிக்கும், இந்த முகாமில் 10 ஆயிரம் பேர் பயிற்சி பெற உள்ளனர். 2022–ம் ஆண்டுக்குள் இதன் மூலம் 11 லட்சத்து 24 ஆயிரம் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் ஒரு அங்கமான ஊடகம் மற்றும் பொழுகுபோக்கு திறன் சபை, பிரதமரின் ‘கவுஷல் விகாஸ் யோஜனா’ திட்டத்தில் பங்கேற்று இந்தியா முழுவதும் 5 ஆயிரம் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது.