இந்திய மண்ணில் கடந்த 36 ஆண்டுகளில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களில் சாதிக்க முடியாத நிலையில் இங்கிலாந்து அணி நாடு திரும்பியுள்ளது.
இந்தியாவில் கடந்த 3 மாதங்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி, டெஸ்ட் தொடர், டி20 தொடர், ஒரு நாள் தொடர் என அனைத்திலும் தோல்வி கண்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3 ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றதன் மூலம் ஒரு நாள் தொடரை இந்தியாவிடம் இழந்தது.
இங்கிலாந்து அணி 1984-85 இல் இந்திய மண்ணில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. அதன்பிறகு கடந்த 36 ஆண்டுகளில் இந்திய மண்ணில் 8 ஒரு நாள் தொடர்களில் விளையாடியபோதிலும், அதில் ஒன்றைக்கூட வெல்ல முடியவில்லை.
குறிப்பாக கடைசி 15 ஆண்டுகளில் மட்டும் 6 ஒரு நாள் தொடர்களில் விளையாடி அனைத்திலும் தோற்றுள்ளது.