உலகின் முன்னணி திரைப்பட விழாக்களில் ஒன்றான வெனிஸ் திரைப்பட விழாவில் முதல்முறையாக தமிழ்த் திரைப்படம் ஒன்று விருது பெற்றுள்ளது.
வெற்றிமாறன் இயக்கியுள்ள ‘விசாரணை’ திரைப்படம் சிறந்த மனித உரிமைகள் திரைப்படமாக, திரைப்பட விழாக்குழுவினர் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி ஆகியோரால் இணைந்து வழங்கப்பட்டுள்ளன.
மனித உரிமைகளை மையப்படுத்து பல நாடுகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் இந்த விழாவில் பங்கேற்றாலும், ‘விசாரணை’ திரைப்படம் தனித்துவமாக விளங்கியது என அம்னெஸ்டி அமைப்பின் இத்தாலியப் பிரிவின் பேச்சாளர் கூறுகிறார்.
சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புத் துறையினரால் மக்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடத்தப்படும்போது இடம்பெறும் கொடூரங்களை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
வெனிஸ் பட விழாவில் தமது படத்துக்கு கிடைத்துள்ள வெற்றி, உலக அரங்கில் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மேலும் ஒரு வெற்றி என பட த்தின் இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்தார்.
கடந்த 72 ஆண்டுகளாக நடைபெறும் வெனிஸ் திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவொன்றில் பங்கேற்கும் முதல் தமிழ் படமும் இந்தப் படம்தான் என வெற்றிமாறன் கூறுகிறார்.
அடுத்த சில மாதங்களில் இந்தப் படம் இந்தியாவில் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.