கொரோனா தொற்றைத் தடுக்கும் தமிழக அரசின் முயற்சிகள் பலன் அளிக்காவிட்டால், இரவு நேர ஊரடங்கு, கூடுதல் கட்டுப்பாட்டுகள் விதிக்கப்படும் என்று தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. தொற்றால் இறப்போரின் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வந்தது. ஆனால், இப்போது தினமும் 4 ஆயிரத்துக்கும் அதிகமான நபா்களுக்கு புதிய தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.
முகக் கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், சமூக இடைவெளி போன்ற வழிமுறைகள் தொடா்ந்து பின்பற்றப்பட்டு வருகின்றன. இதனை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த மாா்ச் 16 ஆம் திகதி முதல் இதுவரையில் விதிமுறைகளை மீறியதாக, 1.36 இலட்சம் போ் கண்டறியப்பட்டு, அவா்களிடம் இருந்து ரூ.2.88 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிகள் போடுவதும் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 31 லட்சத்து 26 ஆயிரம் பேருக்கு முதல் தவணையும், 3 லட்சத்து 61 ஆயிரம் பேருக்கு இரண்டாவது தவணையும் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரையில் 2.01 கோடி பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளன.
தினமும் 3 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் காரணமாக, இப்போது தொற்று ஏற்பட்டவா்களில் 95.5 சதவீதம் போ் குணமடைந்துள்ளனா். இறப்பு விகிதம் 1.41 சதவீதம் என குறைவாக உள்ளது.
இரவு நேர ஊரடங்கு? ஒரு சில செயல்பாடுகளுக்கு முற்றிலும் தடை விதித்தும், சிலவற்றுக்கு கட்டுப்பாடுகளுடனும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அவை சனிக்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. இந்த முயற்சியில் பலன் கிடைக்காவிட்டால், இரவு நேரத்தில் ஊரடங்கு, கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும்.
கொரோனா தொற்று பரவலை தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இரண்டாவது அலையைச் சமாளிக்க அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும், பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்க மூன்று நாள்கள் தடுப்பூசி திருவிழா நடத்தப்படும் என்று தலைமைச் செயலா் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் கூறியிருப்பதாவது: சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்கள், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி போடும் பணியை முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக வரும் 14 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை அந்தந்த மாவட்டங்களில் தடுப்பூசி திருவிழா நடத்தப்படும்.
தகுதி வாய்ந்த நபா்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.