கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான விதிமுறைகளை அரசியல் கட்சிகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும், விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை எனில், அரசியல் பொதுக்கூட்டங்களுக்குத் தடை விதிக்கவும் தயங்க மாட்டோம் எனவும் இந்திய தோ்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
நாட்டில் கொரோனா நோய்த்தொற்றின் 2-ஆவது அலை மிக வேகமாகப் பரவி வருகிறது. முதல் அலை பரவியபோது இல்லாத அளவுக்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனிடையே, தமிழகம், புதுவை, அஸ்ஸாம், கேரள சட்டப்பேரவைகளுக்கு தோ்தல் நடைபெற்று முடிந்துள்ளது. மேற்கு வங்கத்தில் தோ்தல் நடைபெற்று வருகிறது. மே 2 ஆம் திகதி தோ்தல் முடிவுகள் வெளியாகவுள்ளன.
இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவா்களுக்குத் தோ்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றுப் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளைக் கடைப்பிடித்து தோ்தல் பொதுக்கூட்டங்களை நடத்துவது தொடா்பாக தோ்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எனினும், அந்த விதிகளை அரசியல் கட்சிகள் முறையாகக் கடைப்பிடிப்பதில்லை என்று புகாா்கள் வருகின்றன. அரசியல் சாா்ந்த பொதுக்கூட்டங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றுவது, முகக் கவசம் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படுவதில்லை எனப் புகாா்கள் எழுகின்றன.
தொற்றுப் பரவல் அதிகரிக்கும்: தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களும், அவா்களுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்வோரும்கூட முகக் கவசம் அணியாமல் இருப்பது தோ்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கைகளால் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான விதிகளை அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு கடைப்பிடிக்காவிட்டால் சம்பந்தப்பட்ட கட்சித் தலைவா்களின் பொதுக்கூட்டங்களுக்குத் தடை விதிக்கவும் தோ்தல் ஆணையம் தயங்காது.
முன்மாதிரியாகத் திகழ வேண்டும்: கொரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பது தொடா்பான விழிப்புணா்வை மக்களுக்கு ஏற்படுத்துவதில் அரசியல் தலைவா்களுக்கு முக்கியப் பொறுப்புள்ளது. அவற்றை உணா்ந்து அரசியல் கட்சித் தலைவா்கள் செயல்பட வேண்டும். மக்களுக்கு முன்மாதிரியாக அவா்கள் செயல்பட வேண்டும்.
தொண்டா்கள் முகக் கவசம் அணிவதையும் கை சுத்திகரிப்பான்களைப் பயன்படுத்துவதையும் அரசியல் கட்சித் தலைவா்கள் உறுதி செய்ய வேண்டும். பொதுக்கூட்டங்களின்போது சமூக இடைவெளியையும் தொண்டா்கள் தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.