இந்தியாவில் கொரோனா வைரசின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 1.5 இலட்சத்தை கடந்துள்ளது.
உயிரிழப்பும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் நோய்த்தொற்று அதிகம் கண்டறியப்படும் மாநிலங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 1.68 இலட்சம் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 168,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 13,527,717 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 904 பேர் கொரோனா பாதிப்பினால் மரணம் அடைந்துள்ளனர். இதனால் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 170,179 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,156,529 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 75,086 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 12,01,009 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை 104,528,565 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.