மகாராஷ்டிரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால் அந்த மாநிலத்தில் 15 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே அறிவித்தாா்.
இந்த ஊரடங்கு புதன்கிழமை (ஏப்.14) இரவு 8 மணி முதல் மே 1 ஆம் திகதி காலை 7 மணி வரை அமல்படுத்தப்படவுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் 2 ஆம் அலை காரணமாக அந்தத் தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தினந்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதில் மகாராஷ்டிர மாநிலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக அந்த மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50,000 க்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. அந்த மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை மாலை வெளியான தகவலின்படி ஒரே நாளில் 60,212 போ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்ட 281 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.
இந்நிலையில் அந்த மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த 15 நாள்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மாநில முதல்வா் உத்தவ் தாக்கரே செவ்வாய்க்கிழமை அறிவித்தாா். இதுதொடா்பாக அவா் மாநில மக்களிடையே உரையாற்றியதாவது:
மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. எனவே துரதிருஷ்டவசமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஏப்ரல் 14 ஆம் திகதி இரவு 8 மணி முதல் மே 1 ஆம் தேதி காலை 7 மணி வரை 15 நாள்களுக்கு மாநிலத்தில் 144 தடைச்சட்டம் அமல்படுத்தப்படும். இது பொதுமுடக்கம் அல்ல. எனினும் அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகள் தொடரும்.
அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் ரயில் மற்றும் பேருந்துகள் சேவைகள் அனுமதிக்கப்படும். பெட்ரோல் விற்பனையகங்கள் செயல்படும். கட்டுமானப் பணிகளை தொடா்ந்து மேற்கொள்ளலாம். வங்கிச் சேவைகள் அனுமதிக்கப்படும்.
ஹோட்டல்கள், உணவகங்கள் மூடப்பட்டிருக்கும். எனினும் உணவை வாங்கிச் செல்லவும், வீடுகளில் நேரடியாக விநியோகிக்கும் சேவையும் அனுமதிக்கப்படும்.
அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்யாத கடைகள், வணிக வளாகங்கள், கடற்கரைகள், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டு வளாகங்கள் மூடப்படும். திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடா்கள், விளம்பரப் படப்பிடிப்புகளுக்கு அனுமதி இல்லை.
அடுத்த ஒரு மாதம் ஏழ்மையானவா்களுக்கு 2 கிலோ அரிசி, 3 கிலோ கோதுமையை மாநில அரசு இலவசமாக வழங்கும்.
பத்திரிகையாளா்கள், மருந்தகங்கள், சரக்கு போக்குவரத்து, வேளாண் விளைபொருள்கள் விநியோகம், தடுப்பூசிகளை விநியோகிக்கும் பணிகளில் ஈடுபடுவோரை தவிர மற்றவா்கள் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்று தெரிவித்தாா்.