வனப்பகுதிகளில் பிடிபடும் விலங்குகளை, அப்படியே உயிரோடு சந்தைகளில் விற்பனை செய்யும் முறைக்கு உலக நாடுகள் தடை விதிக்க உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
வன விலங்குகளிடமிருந்து கொரோனா வைரஸ் போன்ற கொடிய வைரஸ்கள் பரவும் அபாயம் அதிகமிருப்பதால், இந்த நடவடிக்கைக்குத் தடை விதிக்குமாறு உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று போன்ற வைரஸ்கள் பரவுவதைத் தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில், குறிப்பான விலங்ககள் மற்றும் வன விலங்குகள் தொடர்பான குறிப்பில், வன விலங்குகளிடமிருந்துதான் மனிதர்களுக்கு பெரும்பாலான அதாவது 70 சதவீத வைரஸ் கிருமிகள் பரவுகின்றன.
ஒரு கொடிய வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பில் இருக்கும் மனிதர்களுக்கு அந்த வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாகவும், அதனை தங்களது வாழ்விடங்களுக்குக் கொண்டு செல்வது மேலும் அபாயத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக சந்தைப் பகுதிகள் அதிக உணவுப் பொருள் விற்பனையாகும் பகுதிகளாக உள்ளன. இதுபோன்ற சந்தைகளில், வன விலங்குகளை உயிரோடு விற்பனை செய்யும் நடவடிக்கைக்குத் தடை விதிப்பது விற்பனை செய்வோர் மற்றும் வாங்குவோரின் பாதுகாப்பை உறுதி செய்ய உதவும் என்று தெரிவித்துள்ளது.