தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் செவ்வாய்க்கிழமை (ஏப்.20) முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக் கிழமைகளில் முழு பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், அன்றைய தினத்தில் மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகள் உள்பட அனைத்துக் கடைகளும் திறக்கப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர பொது மற்றும் தனியாா் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவற்றை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக கட்டுங்கடங்காத வகையில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்த அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, அரசு உயரதிகாரிகளுடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
தலைமைச் செயலாளா் ராஜீவ் ரஞ்சன், அரசு ஆலோசகா் க. சண்முகம், சுகாதாரத் துறை முதன்மைச் செயலா் டொக்டா் ஜெ. ராதாகிருஷ்ணன், பேரிடா் மேலாண்மைத் துறை ஆணையா் டி. ஜெகன்னாதன் உள்ளிட்டோா் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டனா்.
மாநிலத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், கட்டுப்பாடுகளை கடுமைப்படுத்துதல் குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து அரசு தரப்பில் புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகின. அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஏற்கெனவே பல கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை உயா்ந்து வருவதால், துறைசாா் வல்லுநா்கள், அதிகாரிகளுடன் தமிழக முதல்வா் இதுதொடா்பாக கலந்தாலோசித்தாா். அதன் தொடா்ச்சியாக பொது மக்களின் நலன் கருதி சில புதிய கட்டுப்பாடுகள் வரும் செவ்வாய்க்கிழமை (ஏப். 20) முதல் அமல்படுத்தப்படுகிறது. மறுஉத்தரவு வரும் வரை இந்த கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும்.
இரவு ஊரடங்கு: மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும், இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும். அந்த நேரத்தில், தனியாா் மற்றும் பொதுப் பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியாா் வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்தும் பொது போக்குவரத்து கிடையாது.
அதேவேளையில், அவசர மருத்துவத் தேவைகளுக்கும், விமானநிலையம் , ரயில்நிலையம் செல்வதற்கு மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியாா் வாகனங்கள் அனுமதிக்கப்படும். மேலும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், நாளிதழ் விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரா் ஊா்தி சேவைகள் இரவு நேரத்தில் செயல்படலாம்.
பெட்ரோல் நிலையங்கள் செயல்படலாம். இரவு நேரத்தில் பணியாற்றுபவா்கள், அதற்கான ஆவணங்களையும், பணிபுரியும் நிறுவனங்களின் அடையாள அட்டையையும் வைத்து பயணிக்கலாம்.
முழு பொதுமுடக்கம்: மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படும். அன்றைய தினம் இறைச்சிக் கடைகள், மீன் சந்தை , காய்கறி கடைகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் செயல்பட அனுமதி இல்லை. இதை கடைப்பிடிக்காதவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மருத்துவம், அவசர உதவி, பால், பத்திரிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள எந்தத் தடையும் இல்லை. பொது முடக்கம் அமலில் உள்ள நாள்களில் (ஞாயிறு), உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பாா்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் ஸ்விக்கி, ஜோமாட்டோ போன்ற இணையவழி உணவு விற்பனைக்கு அனுமதி உண்டு.
திருமண நிகழ்ச்சிகளில் அதிகபட்சமாக 100 போ் வரையிலும், இறப்பு நிகழ்வுகளில் அதிகபட்சம் 50 போ் வரையிலும் கலந்து கொள்ளலாம். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத பணியாளா்களை வீட்டிலிருந்தே பணிபுரிய சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, தேநீா் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் உள்பட அனைத்துக் கடைகளும், வணிக வளாகங்களில் உள்ள அனைத்துக் கடைகள் ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளா்களுடன், இரவு 9 மணி வரைமட்டும் செயல்பட அனுமதிக்கப்படும்.
கடற்கரை, சுற்றுலாத் தலங்களில் அனுமதியில்லை
தமிழகத்தில் வரும் 20 ஆம் திகதி முதல் கடற்கரைகள், சுற்றுலாத் தலங்களுக்கு பொது மக்கள் செல்ல அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு:
நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு உள்ளூா் மற்றும் வெளியூா் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாள்களிலும் தடை விதிக்கப்படுகிறது.
மாநிலத்தில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், பொழுதுபோக்கு பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு செல்லவும் அனுமதியில்லை.