மூன்று முறை ஒலிம்பிக் போட்டிகளில் ஓட்டப்பந்தய வீராங்கனையாக பங்கேற்று, வெற்றி வாய்ப்பை நழுவவிட்டு, ‘எஸ்கார்ட்’ எனப்படும் விலைமகளாக மாறிப்போன அமெரிக்க வீராங்கனையின் கதை இன்று புத்தகமாக வெளியிடப்படுகிறது.
1992 பார்ச்லோனா ஒலிம்பிக் போட்டி, 1996 அட்லாண்டா ஒலிம்பிக் போட்டி, 2000 சிட்னி ஒலிம்பிக் போட்டி ஆகியவற்றில் ஓட்டப்பந்தய வீராங்கனையாக பங்கேற்றவர் சூசி பெவர் ஹாமில்டன். முதல் இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றிவாய்ப்பை தவறவிட்ட இவர், 2000-ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில், 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெறும் தகுதிவாய்ந்த வீராங்கனைகளில் ஒருவராக கருதப்பட்டார்.
எல்லைக்கோட்டை தொடுவதற்கு 150 மீட்டர் தூரமே இருந்த நிலையில், சுவாசக் கோளாறு ஏற்பட்டு மேற்கொண்டு ஓட முடியாமல், தடுமாறி விழுந்த சூசி பெவர் ஹாமில்டன் மூன்றாவது முறையும் வெற்றிவாய்ப்பை நழுவவிட்டார். அதன் பின்னர் நடந்த ஒலிம்பிக் போட்டிகள் எதிலும் பங்கேற்காமல், திருமணம் செய்துக்கொண்டு ஒரு பெண் குழந்தைக்கு தாயாக உள்ள ஹாமில்டன், குடும்ப பொறுப்புகளை கவனித்துக் கொண்டு, உபரியாக ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது.
தற்போது, 47 வயதாகும் ஹாமில்டன், லாஸ் வேகாஸ் நகரில் எஸ்கார்ட் எனப்படும் மறைமுக விபசாரத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், இதற்காக ஒரு மணி நேரத்திற்கு 1200 அமெரிக்க டாலர்களை கூலியாக வாங்குவதாகவும் அமெரிக்காவின் பிரபல இணையதளம் ஒன்று, படங்களுடன் கடந்த 2012-ம் ஆண்டு செய்தி வெளியிட்டது.
இதனை அப்போதே ஒப்புக்கொண்ட ஹாமில்டன், தனது டுவிட்டர் வலைப் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
எனது திருமண வாழ்வில் ஏற்பட்ட தோல்வி மற்றும் விரக்தியை சரிசெய்துக்கொள்ளும் முயற்சியில் நான் தவறான பாதையில் சென்றுவிட்டேன். இது மிகப்பெரிய தவறு என்பது தெரிந்தே இதில் நான் ஈடுபட்டேன். என்னை யாரும் இந்த தொழிலில் பலியாக்கி விடவில்லை. எல்லாவற்றிற்கும் நானே முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கின்றேன்.
இந்த விவகாரம், வெளியே யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை என நான் கருதினேன். இப்போது நினைத்துப் பார்த்தால் நான் தவறான காரியத்தை செய்துவிட்டதாக உணர்கின்றேன். எனது செய்கையின் மூலம் காயப்பட்டவர்களிடம் எப்படி மன்னிப்பு கேட்பது என்றே எனக்கு புரியவில்லை.
எனது குடும்பத்தாரின் அன்பைப் பெற என் தவறுகளை திருத்திக்கொள்ள நினைக்கின்றேன். ஒரு நல்ல தாயாக, மனைவியாக, மகளாக, தோழியாக எனது உறவுகளை புதுப்பித்துக்கொள்ள விரும்புகின்றேன் என குறிப்பிட்டிருந்தார்.
அப்போது, தற்கொலை எண்ணத்தால் தூண்டப்பட்டு, மனநோயாளியாகவும் மாறிப்போய் அதீத மனஎழுச்சி மற்றும் அதீத மனஅழுத்தம் போன்றவற்றை ஒரே நேரத்தில் பிரதிபலிக்கும் இருமுனை கோளாறு என்ற மனபாதிப்புக்கு உள்ளாகி இருந்த சூசி பெவர் ஹாமில்டனுக்கு உறுதுணையாக இருந்த அவரது கணவர், இந்த நோயில் இருந்தும், பழைய துயரங்களில் இருந்தும் இவர் விடுபட உதவியுள்ளார்.
தனது வாழ்க்கையில் கடந்துவந்த துயர சம்பவங்களை எல்லாம் ‘வேகமான பெண்’ (Fast Girl)என்ற தலைப்பில் நான்கு சூசி பெவர் ஹாமில்டன், சயசரிதை புத்தகமாக எழுதியுள்ளார். எனது மனம் சார்ந்த இருமுனை கோளாறு என்னை காமத்தின் பக்கம் திசை திருப்பி விட்டது. அதுவே, போதைமருந்து, மதுப்பழக்கம் மற்றும் சூதாட்டத்தின் பக்கமும் என்னை வழிநடத்திச் சென்றது என தனது புத்தகத்தின் முன்னுரையில் இவர் குறிப்பிட்டுள்ளார்.
மிகவும் சுவாரஸ்யமான திருப்புமுனைகள் கொண்ட புத்தகமாக இருக்கும் என கருதப்படும் ‘வேகமான பெண்’ இன்று அமெரிக்காவில் விற்பனைக்கு அறிமுகம் செய்விக்கப்படவுள்ளது.