தமிழகத்தில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. முதல் அலையை விட 2 வது அலை வீரியத்துடன் காணப்படுகிறது. இதை தடுக்க ஊரடங்கு உத்தரவு, புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்து வருகிறது. ஓட்டல்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதி, டீக்கடைகள், காய்கறி, மளிகைக்கடைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்படும் போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும் கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 7 பேர் பலியானார்கள். நேற்று 4 பேர் பலியாகி உள்ளனர். முன்பு கொரோனாவுக்கு வயதானவர்கள் பலியாகி வந்தனர்.
தற்போது பரவும் 2 வது அலை இளைஞர்களை அதிகம் பாதிக்கிறது. நேற்று 35, 45 வயதுள்ள 2 பேர் பலியாகி உள்ளனர். சமீபத்திலும் 35, 40 வயதுள்ள நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
இது பற்றி கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் செந்தில்குமாரிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:-
கொரோனா 2 வது அலை தற்போது வேகமாக பரவி வருகிறது. முதல் அலையை விட சற்று வீரியத்துடன் காணப்படுகிறது. சிலருக்கு காய்ச்சல், இருமல், சளியை விட தலைவலி அதிகமாக இருக்கிறது. உடல் சோர்வு அதிகம் காணப்படுகிறது. முதல் அலை அதிகம் நுரையீரலை பாதித்தது. 2 வது அலை நுரையீரலை பாதித்தாலும், அதிகம் இதயத்தை தான் பாதிக்கிறது.
கொரோனா வயதானவர்களை மட்டும் தாக்கும். நாம் உடல் தகுதியாக இருக்கிறோம். இதனால் நம்மை தாக்காது என்று இளைஞர்கள் நினைத்துக்கொண்டு அலட்சியமாக இருக்கிறார்கள். தற்போது பரவும் கொரோனாவில் இளைஞர்கள் அதிகம் பேர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக இதயத்தை செயலிழக்க செய்து உயி ரிழப்பை ஏற்படுத்துகிறது.
ஆகவே பொதுமக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். ஒரு சிலர் காய்ச்சல், இருமல் வந்தால் டாக்டர்கள் ஆலோசனை இல்லாமல் மருந்து, மாத்திரைகளை பயன்படுத்தி விடுகிறார்கள். அவ்வாறு செய்யக்கூடாது. உடனே அருகில் இருக்கும் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சுய மருந்து எடுத்து, நோய்த்தொற்று அதிகம் ஆகி வரும் நோயாளிகளை காப்பாற்ற முடியாமல் போய் விடும்.
ஆகவே இதில் கவனமாக இருக்க வேண்டும். கொரோனா பரிசோதனை செய்தால், நம்மை ஆம்புலன்சில் ஏற்றிச்செல்வார்கள் என்ற பயம் வேண்டாம். ஆகவே மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தலின் பேரில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்ற வேண்டாம். அவ்வப்போது சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.