நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றின் 2 ஆம் அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, சேத்தேஷ்வர் புஜாரா மற்றும் அவரது மனைவி, இஷாந்த் சர்மா மற்றும் அவரது மனைவி பிரதிமா சிங் ஆகியோர் திங்கள்கிழமை முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
இது தவிர அஜின்க்யா ரஹானே, உமேஷ் யாதவ் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் கடந்த வாரம் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்காக ஜூன் 2 ஆம் திகதி இங்கிலாந்து செல்கிறது. இதைத் தொடர்ந்து, இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரிலும் பங்கேற்கிறது.
இந்திய வீரர்கள் தற்போது முதல் தவணை தடுப்பூசி மட்டுமே செலுத்திக் கொண்டுள்ளதால், 2 வது தவணை செலுத்திக் கொள்வது கேள்விக்குறியாகியுள்ளது.
இதுபற்றி பிசிசிஐ அலுவலர் ஒருவர் விளக்கமளிக்கையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்பதால் வீரர்கள் முதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். ஆனால், இரண்டாவது தவணை தடுப்பூசிதான் கேள்விக்குறியாக உள்ளது.
பிரிட்டனில் வைத்தே வீரர்கள் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் ஆலோசனை நடத்தி வருகிறோம். அதற்கு பிரிட்டன் அரசு ஒப்புக்கொள்ளாவிட்டால், இரண்டாவது தவணைக்கான தடுப்பூசி இந்தியாவில் இருந்தே கொண்டு செல்லப்படும். இது எப்படி செயல்பாட்டுக்கு வரும் என்பது வரும் நாள்களில் தெரியவரும் என்றார் அவர்.