சவுதி அரேபியா நாட்டில் உள்ள முஸ்லிம்களின் புனித நகரமான மெக்கா நகரின் பெரிய மசூதியில் கடந்த வாரம் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 115 ஹஜ் யாத்ரீகர்கள் பலியானார்கள். அவர்களில் 11 பேர் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து ஹஜ் யாத்திரை செய்ய புறப்பட்டு சென்றவர்கள் என தெரியவந்துள்ளது.
இதுதவிர, சுமார் 200 யாத்ரீகர்கள் காயங்களுடன் மெக்கா நகரில் உள்ள ஆஸ்பதிரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட உயர்மட்ட குழுவின் விசாரணை நேற்று சவுதி மன்னர் சல்மானிடம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இந்த விபத்தில் பலியான யாத்ரீகர்கள் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரியால் (இந்திய மதிப்புக்கு சுமார் ரூ.1.75 கோடி ரூபாய்) நிவாரணம் வழங்குமாறு மன்னர் சல்மான் உத்தரவிட்டுள்ளதாக சவுதி அரசு இன்று அறிவித்துள்ளது. விபத்தில் காயம் அடைந்து உடலுறுப்பு ஊனம் அடைந்தவர்களுக்கும் இதே தொகை வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு 5 லட்சம் ரியால்கள் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்த யாத்ரீகர்களின் குடும்பங்களை சேர்ந்த தலா இரண்டு பேர் அடுத்த ஆண்டு (2016) ஹஜ் யாத்திரையின்போது சவுதி மன்னரின் விருந்தினராக மெக்காவுக்கு வர அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.