அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருக்கும் பள்ளியில் 9-வது கிரேட் படிப்பவர் அகமது முகமது(14), சூடான் வம்சாவளியைச் சேர்ந்தவர்.
புதிய பொருட்களை உருவாக்குவதிலும், அறிவியலிலும் அதிக ஆர்வம் கொண்டவர். பென்சில்கள் வைப்பதற்கான சிறு பெட்டியில் சொந்தமாக ஒரு அலராம் அடிக்கும் கடிகாரத்தைச் செய்து, அதனை திங்கள்கிழமை தனது வகுப்புக்குக் கொண்டு வந்து ஆங்கில ஆசிரியையிடம் பெருமையாகக் காட்டியுள்ளார். ஆனால் அவருக்கு கிடைத்தது பாராட்டு அல்ல.
அதை வெடிகுண்டு என நினைத்து ஆசிரியர்கள் காவலரை அழைத்தனர். உடனே அகமது கைது செய்யப்பட்டார். பின்னர் காவல்நிலைத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட முஸ்லிம் மாணவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி ஒபாமா அவரை வெள்ளை மாளிகையில் அடுத்த மாதம் நடைபெறும் விண்வெளி அறிஞர்களுக்கான விருந்தில் கலந்துக்கொள்ள அழைத்துள்ளார்.
இது பற்றி டுவிட்டரில் ஒபாமா கூறியுள்ளதாவது “உங்கள் கடிகாரம் மிகவும் அருமை. அதை அதிபர் மாளிகைக்கு எடுத்து வர விருப்பமா? உங்களைப் போன்ற சிறுவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டியது மிகவும் முக்கியம். இதுதான் அமெரிக்கா பெருமைமிக்க நாடாக வைத்திருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தான் உருவாக்கிய கடிகரத்தின் அலராத்தையே , தினமும் காலையில் தூக்கத்திலிருந்து எழுந்துக்கொள்ள பயன்படுத்தியுள்ளார் அகமது. அவர் கைது செய்யப்பட்ட போது அணிந்திருந்த பனியனில் இருந்த சொல் ’நாசா’.
இதேவேளை, கடிகாரம் உருவாக்கியதற்காக கைது செய்யப்பட்ட அமெரிக்க முஸ்லிம் பள்ளி மாணவர் அகமது முகமது ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவரை சந்திக்க விரும்புவதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், கூறியுள்ளார்.
பேஸ்புக்கில் அவர் இட்டுள்ள பதிவில் “ புதிய பொருட்களை உருவாக்குவதிலும், அறிவியலிலும் அதிக ஆர்வமும், கனவும், லட்சியமும் கொண்டவர்கள் பாராட்டப்பட வேண்டும் மாறாக கைது செய்யப்படக் கூடாது. ’அகமது, பேஸ்புக் தலைமையகத்திற்கு வர விரும்பினால், நான் உங்களை சந்திக்க ஆர்வமாக உள்ளேன்’. கண்டுபிடிப்புகளை தொடருங்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மார்க் ஸக்கர்பெர்க் மட்டும் அல்ல, ஹிலாரி கிளிண்டன் உட்பட பல முக்கிய நபர்கள் மற்றும் அமெரிக்க பொது மக்கள் மாணவர் அகமது முகமதுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதில் ஒருவர் “ ஒரு வெள்ளை இன சிறுவன் அணு இணைவு உலையை உருவாக்கினால் அது பாரட்ட தகுந்த சாதனை. அதுவே ஒரு முஸ்லிம் கடிகாரம் உருவாக்கினால் ?” என்று கேள்வியெழுப்பியுள்ளார். ஒரு ஆண்டு முன்னர் வெள்ளை இன சிறுவன் ஒருவன் அணு இணைவு உலையை உருக்கி பலரது பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.