இது குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது: சென்னை எழும்பூரில் தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று தொலைபேசியில் பேசிய நபர், நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர், உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதிகாரிகளின் உத்தரவின் பேரில் சென்னை அருகே ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவினரும், நீலாங்கரை காவல்துறையினரும் இணைந்து சோதனை நடத்தினர்.
பல மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில் தொலைப்பேசி அழைப்பு வெறும் மிரட்டல் புரளி என தெரியவந்தது. இது தொடர்பாக நீலாங்கரை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சைபர் குற்றப்பிரிவுடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வர்(26) என தெரியவந்தது. இவர் சற்று மன நலம் பாதித்தவர் என கூறப்படுகிறது. இதையடுத்து அவரது குடும்பத்தினரை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
புவனேஸ்வர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் பழனிசாமி, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சூர்யா உள்பட பலர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பதும், ஏற்கெனவே இவர் கடந்தாண்டு நடிகர் ரஜினி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.