நடிகை காஜல் அகர்வாலுக்கு திருமண ஏற்பாடுகள் நடப்பதாக செய்திகள் பரவி உள்ளன. இவரது தங்கை நிஷாவுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்துள்ளது. எனவே, காஜல் அகர்வால் திருமணத்தையும் உடனடியாக முடித்துவிட பெற்றோர்கள் வரன் பார்ப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில், காஜல் அகர்வால் ஒரு இளைஞருடன் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இணையதளங்களில் வெளிவந்தன.
அந்த இளைஞர் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் என்றும், இருவரும் காதலிக்கிறார்கள் என்றும் தெலுங்கு படஉலகில் கிசுகிசுக்கப்பட்டது. காஜல் அகர்வாலுக்கும் சொந்த ஊர் மும்பை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அவரிடம் உங்களுக்கு எப்படிப்பட்டவர் கணவராக வரவேண்டும்? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, “நான் ஒரு தொழில் அதிபரைத்தான் மணப்பேன், அவர் அதிகம் படித்தவராகவும், நகைச்சுவை உணர்வும் உள்ளவராகவும் இருக்கவேண்டும்” என்று பதில் அளித்தார்.
எனவே, மும்பை தொழில் அதிபரைத்தான் அவர் திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்று கூறப்பட்டது. திருமணம் முடிவாகி விட்டதால் அவரை புதிய படங்களில் நடிக்க வைக்க டைரக்டர்கள் தயங்குவதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து திருமணம் பற்றிய செய்திக்கு காஜல் அகர்வால் விளக்கம் அளித்தார்.
அவர் கூறும்போது, “எனக்கு திருமணம் என்று வெளியான செய்திகளில் உண்மை இல்லை. தொழில் அதிபரை நான் காதலிக்கிறேன் என்கிறார்கள். அதுவும் வதந்திதான். இதுவரை யாரையும் நான் காதலிக்கவில்லை. தனியாகத்தான் இருக்கிறேன். சினிமாவில்தான் என் முழு கவனமும் இருக்கிறது. எனவே, திருமணத்துக்கு நான் அவசரப்படவில்லை” என்றார்.