மீண்டும் திருமணம் செய்துகொண்டதாக வெளியான செய்திகளை நடிகை வனிதா விஜய்குமார் மறுத்துள்ளார்.
திரைப்பட நடிகை வனிதா, கடந்த வருடம் ஜூன் மாதம் பீட்டா் பால் என்பவரை 3-ஆவதாக திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து தனக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாக பீட்டா் பால் மீது வடபழனி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பீட்டர் பாலின் மனைவி உடனடியாகப் புகாா் அளித்தாா். வனிதா விஜய்குமாரும் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலனும் பேட்டிகளில் ஒருவரையொருவர் விமர்சித்துக்கொண்டார்கள். பிறகு, கணவர் பீட்டர் பாலுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் காரணமாக அவரை வனிதா விஜய்குமார் பிரிந்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் நடிகை வனிதா மற்றொரு திருமணம் செய்துகொண்டுள்ளதாக செய்தி ஒன்று வெளியானது. இதையடுத்து ட்விட்டரில் அவர் கூறியதாவது:
உங்கள் அனைவருக்கும் இதைத் தெரியப்படுத்த விரும்புகிறேன். நான் இப்போது சிங்கிளாக உள்ளேன். எனவே வதந்திகளைப் பரப்பாதீர்கள். அதை யாரும் நம்பாதீர்கள் என்றார்.
இதுபற்றிய ரசிகர் ஒருவரின் கேள்விக்குப் பதில் அளித்த வனிதா, ஊடகங்கள் இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதை நிறுத்தவேண்டும். என் வாழ்க்கை யாருடைய பிரச்னையும் கிடையாது. இது ஏன் செய்தியாகவும் ஊகமாகவும் வெளியாகவேண்டும்? இந்த உலகில் கவலைப்படுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. என்னைப் பற்றி கவலைப்படுவதை நிறுத்துங்கள். என் வாழ்க்கையைப் பார்த்துக்கொள்ளும் அளவுக்கு எனக்குப் பக்குவம் உண்டு என்றார்.