‘கழுகு’, ‘வன்மம்’, ‘வானவராயன் வல்லவராயன்’, ‘யட்சன்’ படங்களில் நடித்துள்ள கிருஷ்ணா கோவை, மேட்டுப் பாளையம் அருகே உள்ள பெத்தி குட்டையை சேர்ந்த ஹேமலதா என்ற என்ஜினீயரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு பிப்ரவரி 6–ந் தேதி இவர்கள் திருமணம் நடந்தது.
தற்போது கிருஷ்ணாவின் மனைவி அவரைப் பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ஹேமலதா கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது கணவரும், அவரது பெற்றோரும் வரதட்சணை கொடுமை செய்வதாக புகார் செய்தார்.
இதையடுத்து கிருஷ்ணா, அவரது தந்தை சேகர், தாய் மதுபாலா ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது குறித்து கிருஷ்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சற்றும் எதிர்பாராத வகையில் என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற அறிவுரைப்படி இருவருக்கும் இடையே தற்போது சமரச பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
எங்கள் இருவருக்குமான விவாகரத்து வழக்கு குடும்ப நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நம் நாட்டின் சட்ட விதிமுறைகளை மதிப்பவன் நான். எனவே இந்த வழக்கை உரிய முறையில் விசாரிக்க எனது முழு ஒத்துழைப்பையும் அளிப்பேன்’ என்று கூறியுள்ளார்.