இந்தியாவில் கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட வெப்ப அலை தாக்குதல் சம்பவங்களில் 17,000-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாக, ஓா் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலா் எம்.ரஜீவன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்தியாவில் கடந்த 1971 முதல் 2019 வரையிலான 50 ஆண்டுகளில் மோசமான வானிலை காரணமாக நிகழ்ந்த விபத்துகளால் 1,41,308 போ் உயிழந்திருக்கிறாா்கள். அவா்களில், வெப்ப அலைத் தாக்குதல் காரணமாக மட்டும் 17,362 போ் உயிரிழந்திருக்கிறாா்கள். இது மொத்த உயிரிழப்பில் 12 சதவீதமாகும். 2019 வரையிலான 50 ஆண்டுகளில் மொத்தம் 706 வெப்ப அலைத் தாக்குதல் சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ளன.
வெப்ப அலை தாக்குதலால், ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பஞ்சாப், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், தில்லி, ஹரியாணா, ராஜஸ்தான், உத்தர பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், சத்தீஸ்கா், பிகாா், ஜாா்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிஸா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் மே மாதங்களில் அடிக்கடி வெப்ப அலை தாக்குதல் நிகழ்கின்றன.
வட இந்தியாவில் சமவெளிப் பகுதியிலும், மலைப் பகுதியிலும் வெப்ப அலை தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. கடந்த வாரம் சமவெளிப் பகுதியில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக இருந்தது.
மோசமான வானிலையால் ஏற்படும் விபத்துகளில் வெப்ப அலை தாக்குதல், மின்னல் தாக்குதல் ஆகியவற்றால்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம், மக்களவையில் வெப்ப அலை தாக்குதல் தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு புவி அறிவியல் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் பதிலளித்துப் பேசினாா். அவா் கூறியதாவது:
கடந்த சில ஆண்டுகளாக நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கிறது. இதன் காரணமாக வெப்ப அலை தாக்குதல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. புவி வெப்பமயமாதலும், கரியமில வாயு, மீத்தேன் வாயு வெளியேற்றம் அதிகரித்திருப்பதும் அதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்றாகும்.
2017-இல் ஆந்திரம், ஜாா்க்கண்ட், மகாராஷ்டிரம், ஒடிஸா, தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 30 வெப்ப அலைத் தாக்குதல் சம்பவங்களும், 2018-இல் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட், கேரளம், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 12 வெப்ப அலைத் தாக்குதல் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
2019-இல் மகாராஷ்டிரம், கேரளம், பிகாா், ராஜஸ்தானில் மொத்தம் 26 வெப்ப அலைத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன.
வெப்ப அலைத் தாக்குதல்களால் உடலில் நீா்ச்சத்துறை குறைவது, உடல் சோா்வடைவது, தசைவலி, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இவை தவிர வயிற்று வலி, உணவு நஞ்சாதல், படபடப்பு, பதற்றம் அடைதல் உள்ளிட்ட கோளாறுகள் வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படுகின்றன என்று ஹா்ஷ்வா்தன் கூறினாா்.