ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கான தரவரிசையில் இந்திய தலைவி மிதாலி ராஜ் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
இங்கிலாந்து மகளிருடன் சமீபத்தில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய தலைவி மிதாலி ராஜ் 3 ஆட்டங்களிலும் அரைசதம் அடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி ஆட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 75 ஓட்டங்கள் சேர்த்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.
இதன்மூலம், ஐசிசி தரவரிசையில் அவர் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.
கடைசி இரண்டு ஆட்டங்களில் முறையே 44 மற்றும் 19 ஓட்டங்கள் எடுத்த ஷெபாலி வர்மா 49 இடங்கள் முன்னேறி 71 வது இடத்தைப் பிடித்துள்ளார். ஜுலான் கோஸ்வாமி பந்துவீச்சில் 4 இடங்கள் முன்னேறி 53 வது இடத்தைப் பிடித்துள்ளார். தீப்தி சர்மா ஒரு இடம் முன்னேறி 12 வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.
மிதாலி ராஜும் முதலிடமும்:
22 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் ஐசிசி தரவரிசையில் அவர் முதலிடத்தைப் பிடிப்பது இது 8 வது முறை.
கடைசியாக 2018 ஆம் ஆண்டு பெப்ரவரியில் அவர் முதலிடத்தைப் பிடித்தார். முதன்முதலாக 2005 ஆம் ஆண்டு ஏப்ரலில் அவர் முதலிடத்தைப் பிடித்தார்.
மிதாலி ராஜ் முதன்முறையாக முதலிடம் பிடித்ததற்கும், தற்போது முதலிடம் பிடித்திருப்பதற்குமான இடைவெளி 16 வருடங்கள். சர்வதேச கிரிக்கெட்டில் இதுவே அதிகபட்ச இடைவெளி.
இங்கிலாந்து முன்னாள் வீராங்கனை ஜானெட் பிரிட்டின் 1984 ஆம் ஆண்டில் முதன்முறையாக முதலிடம் பிடித்தார். கடைசியாக 1995 ஆம் ஆண்டு முதலிடம் பிடித்தார். இதை அடுத்து, நியூசிலாந்து வீராங்கனை டெப்பி ஹாக்லி 1987 இல் முதன்முறையாகவும், 1997 இல் கடைசியாகவும் முதலிடம் பிடித்தார்.