பொன்னியின் செல்வன் படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என பிரபல இயக்குநர் மணி ரத்னம் கூறியுள்ளார்.
எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் கதையைப் படமாக்கி வருகிறார் இயக்குநர் மணி ரத்னம்.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, சரத் குமார், பிரபு, ஜெயராம், ரஹ்மான், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்தின் திரைக்கதையை மணி ரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் – ஜெயமோகன், இசை – ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் – ரவி வர்மன்.
இந்நிலையில் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் பொன்னியின் செல்வன் படம் பற்றி மணி ரத்னம் கூறியதாவது:
படத்தின் பெரும்பாலான பகுதிகள் அதாவது 75 சதவீதக் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. இதுபோன்ற கரோனா சூழலில் அப்படத்தைப் படமாக்குவது கடினம். என்னுடைய முந்தைய படங்களை விடவும் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. திரையரங்குகளில் தான் பொன்னியின் செல்வன் படம் முதலில் வெளியாகும் என்றார்.