ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று நடிகர் ரஜினி அறிவித்துள்ளார்.
மேலும், வருங்காலத்திலும் அரசியலில் ஈடுபடமாட்டேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வரும்காலத்திலும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த தனது மக்கள் மன்ற மாவட்டச் செயலாளா்களை, சென்னை ராகவேந்திரா மண்டபத்தில், இன்று சந்தித்துப் பேசினார். அதற்கு முன்பாக சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிக்க உள்ளேன். மக்கள் மன்றத்தை தொடரலாமா? அதன் செயல்பாடுகள் என்ன என்பது குறித்தும் ஆலோசிக்க உள்ளேன் என்று கூறியிருந்தார். ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு ரஜினி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், உறுப்பினர்களுக்கும், என்னை வாழ வைத்த தெய்வங்களான ரசிக பெருமக்களுக்கும் வணக்கம். நான் அரசியலுக்கு வர முடியவில்லை என்று சொன்ன பிறகு, ரஜினி மக்கள் மன்றத்தின் பணி என்ன? நிலை என்ன? என்று மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இரக்கிறது. அதை விளக்க வேண்டியது என்னுடைய கடமை.
நான் அரசியல் கட்சி ஆரம்பித்து, அரசியலில் ஈடுபட ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றி, மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் பல பதவிகளையும் பல சார்பு அணிகளையும் உருவாக்கினோம்.
கால சூழலால் நாம் நினைத்தது சாத்தியப்படவில்லை. வருங்காலத்தில் அரசியலில் ஈடுபடப்போகம் எண்ணம் எனக்கில்லை. ஆகையால் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு, சார்பு அணிகள் எதுவுமின்றி, இப்போதைக்கு ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள செயலாளர்கள், இணை, துணை செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் மக்கள் நலப்பணிக்காக முன்பு போல ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும் என்று அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று ரஜினி தெரிவித்துள்ளார்.