கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 90 வயது மூதாட்டி இரண்டு வகை கொரோனா நோயால் பாதிப்படைந்திருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா மரபியல் மாற்றம் அடைந்து உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இந்தியாவை பொருத்தவரை டெல்டா வகை கொரோனா மக்களை பெரும் பாதிப்புக்குள்ளாகிவருகிறது. ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் ஆல்ஃபா, பீடா வகை கொரோனா பரவிவருகிறது.
இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 90 வயது மூதாட்டி இரண்டு வகை கொரோனா நோயால் பாதிப்படைந்திருந்தது ஆய்வின்போது தெரியவந்துள்ளது. இது அரிதானது என்றும் ஆனால் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த அந்த மூதாட்டிக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை, தனியாக வசித்துவரும் அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. கடந்த மார்ச் மாதம், பெல்ஜியம் நாட்டில் ஆல்ஸ்ட் நகரில் உள்ள ஒஎல்வி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது, அவருக்கு கொரோனா இருந்தது உறுதியானது.
தொடக்கத்தில், அவர் நன்றாக சுவாசித்துவந்துள்ளார். ஆனால், மூதாட்டியின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து உயிரிழந்துள்ளார். பின்னர், மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பிரிட்டனில் கண்டறியப்பட்ட ஆல்ஃபா வகை கொரோனாவாலும் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட பீடா வகை கொரோனாவாலும் அவர் பாதிப்படைந்திருந்தது தெரியவந்தது.