ட்விட்டரில் இஸ்லாம் மதத்துக்கு எதிராக வெளியிடப்பட்ட பதிவுகள் குறித்து சிபிஐ அல்லது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
முன்னதாக, இந்த மனுவை தாக்கல் செய்த வழக்குரைஞரிடம் மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் விவரங்களை படித்தீா்களா என்ற கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதனை முழுமையாகப் படித்துவிட்டு வருமாறு கூறி மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தனா்.
தில்லி நிஜாமுதீன் பகுதியில் கடந்த ஆண்டு மாா்ச் 13 முதல் மாா்ச் 15 ஆம் திகதி வரை தப்லிக் ஜமாத் இஸ்லாமிய அமைப்பின் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்க பல்வேறு வெளிநாடுகளிலிருந்தும் இஸ்லாமியா்கள் வந்தனா். மாநாட்டில் பங்கேற்றவா்கள், மாநாடு முடிந்த பின்னா் தங்கள் நாடுகளுக்குத் திரும்புவதற்கு முன்பாக, இந்தியாவின் பல மாநிலங்களுக்குச் சென்றனா். இவா்களில் சிலருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது பின்னா் கண்டறியப்பட்டது.
இந்தியாவில் கொரோனா அதிக அளவில் பரவ இந்த மாநாடும் காரணம் என பலா் சுட்டுரைப் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து காஜா ஐஜாசுதீன் என்ற வழக்குரைஞா் தெலங்கானா உயா்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தாா்.
அதில், இந்தியாவில் அனைத்து சமூக ஊடகங்களிலும் இஸ்லாம் மதத்துக்கு எதிரான பதிவுகளை வெளியிட தடைவிதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடவேண்டும். மேலும், இதுபோன்ற பதிவுகளை வெளியிடக் காரணமாக ட்விட்டா் நிறுவனம் மற்றும் பயனாளா்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தாா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், மனுதாரா் உச்சநீதிமன்றத்தை அணுகுமாறு கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி உத்தரவிட்டது.
அதனடிப்படையில் அவா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில், இந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ அல்லது என்ஐஏ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும், இஸ்லாமிய மதம் உள்பட வேறு எந்த மதத்துக்கும் எதிரான வெறுக்கத்தக்க பதிவுகள் வெளியிடப்படுவதை தடை செய்யும் வகையிலான வழிகாட்டுதல்களை தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் கொண்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதி ஏ.எஸ். போபண்ணா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையை காணொலி வழியில் நடத்திய நீதிபதிகள், மத்திய அரசின் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளைப் படித்துள்ளீா்களா என்று மனுவை தாக்கல் செய்த வழக்குரைஞரிடம் கேள்வி எழுப்பினா்.
உடனடியாக அவா் புதிய தகவல்தொழில்நுட்ப விதிகளைப் படிக்கத் தொடங்கினாா். அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், புதிய விதிகளை முழுமையாகப் படித்துவிட்டு தயாராக வருமாறு வழக்குரைஞரிடம் கூறிவிட்டு, மனு மீதான விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனா்.