சீனாவில் உள்ள வுஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்று 2019 ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்டது. மெல்லமெல்ல ஒவ்வொரு நாடாக கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து இந்தியா வரும் நபர்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் கண்காணித்து வந்தன.
வுஹான் மாநிலத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மருத்துவ மாணவி, செமஸ்டர் விடுமுறைக்காக கேரள மாநிலம் திருச்சூர் திரும்பினார். அப்போது அவரை தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ததில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதன்மூலம் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதன் நபராக கண்டறியப்பட்டார். பின்னர் மூன்று வார மருத்துவ சிகிச்சைக்குப்பின் குணமடைந்து வீடு திரும்பினார்.
அதன்பின் தற்போது வரை இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியைத் தாண்டியுள்ளது.
இந்த நிலையில் அந்த மாணவி படிப்பு தொடர்பாக டெல்லிக்கு செல்ல தயாராகியுள்ளார். இதனால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அப்போது அன்டிஜென் பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது. ஆனால் ஆர்டி-பிசிஆர் சோதனையில் பாசிட்டிவ் என வந்துள்ளது. இதன் காரணமாக ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் அவருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால் அறிகுறி ஏதும் இல்லை. அந்த மாணவி தற்போது அவரது வீட்டில் நலமாக உள்ளார் என திருச்சூர் மாவட்ட மெடிக்கல் அதிகாரி டாக்டர் ரீனா பிடிஐ நிறுவனத்திடம் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.