கொரோனா மூன்றாம் அலையின் தாக்கத்தை மதிப்பிட அடுத்த 100 நாள்கள் முக்கியமானது என நிதிஆயோக் உறுப்பினர் வி.கே.பால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா 2ஆம் அலையின் காரணமாக நாடு முழுவதும் தொற்று பரவல் முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்தது. முதல் அலை பாதிப்பைக் காட்டிலும் 2ஆம் அலை பரவலில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், தற்போது கொரோனா பரவலின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும் இது மூன்றாம் அலைக்கான ஒரு எச்சரிக்கையாகும் எனத் தெரிவித்தார்.
உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கையின்படி உலகம் மூன்றாம் அலை பாதிப்பை நோக்கி நகர்ந்து வருகிறது. எனினும் இந்தியாவில் மூன்றாம் அலையின் பாதிப்பைக் கட்டுப்படுத்த பிரதமர் மோடி உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார் எனத் தெரிவித்தார்.
நாட்டின் பெரும்பான்மையான மக்கள் மந்தை எதிர்ப்பு சக்தியை இன்னும் அடையாததால் இது மேலும் சிக்கலான ஒன்றாக உள்ளது. எதிர்ப்புசக்தியை அடைய கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. கொரோனா மூன்றாம் அலை குறித்து இன்னும் தெளிவாகக் குறிப்பிட அடுத்த 100 நாள்கள் காத்திருக்க வேண்டியுள்ளது. எனவே அடுத்த 100 நாள்கள் முக்கியமானது என வி.கே.பால் தெரிவித்தார்.