நடிகர், சிவகார்த்திகேயன் தாக்கப்பட்ட சம்பவத்தில் மர்மம் விலகவில்லை. தான் நலமோடு இருப்பதாகவும், அது ஒரு சின்ன விஷயம் என்றும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சம்பவமே நடக்கவில்லை என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூரில் நேற்று நடைபெற்ற பா.சிவந்தி ஆதித்தனார் சிலை திறப்பு விழாவில் நடிகர்கள் கமல் ஹாசன், சிவகார்த்திகேயன், நடிகை ஹன்சிகா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், சிவந்தி ஆதித்தனார் சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
ஒரே விமானம்
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, கமல்ஹாசனும், சிவகார்த்திகேயனும், சென்னையில் இருந்து மதுரைக்கு ஒரே விமானத்தில் வந்திறங்கினர். விமான நிலையத்தில் இருந்து முதலில் கமல் வெளியேறியுள்ளார். அதன்பிறகு சிவகார்த்திகேயன் வெளியேறியுள்ளார்.
தாக்குதல்
சிவகார்த்திகேயன் வெளியேறும்போது, ஒரு கும்பல் அவரை சூழ்ந்து நின்று தாக்கியது. வாசல்வரை ஓட்டமும், நடையுமாகவே சிவகார்த்திகேயன் வெளியே ஓடினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீ போல பகிரப்பட்டது.
காரணங்கள்
கமலின் மகள், நடிகை ஸ்ருதி ஹாசன் பற்றி ஏதோ வாய்துடுக்காக சிவகார்த்திகேயன் பேசியதாகவும் எனவே கமல் ரசிகர்கள் தாக்கியதாகவும், ரஜினியை தூக்கிப்பிடித்து கமலை தாக்கி பேசியதாகவும், எனவே தாக்கியதாகவும் இரு தகவல்கள் உலவுகின்றன. இதுதவிர, சிவந்தி ஆதித்தனார் சிலையை திறக்க சென்றதால், வேறு ஒரு ஜாதியினர் தாக்கியதாகவும் ஒரு தகவல் கசிகிறது.
சின்ன விஷயம் நடந்தது
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிவகார்த்திகேயன் கூறுகையில், “இது ஒரு சின்ன விஷயம். ஆல் இஸ் ஃபைன், அந்த வீடியோதான் வைரலா போகுதே தவிர, ஐயம் ஃபைன். நான் நலமாக இல்லாவிட்டால் உங்கள் முன்னால் நின்று பேச முடியுமா?, தேங்க்யூ உங்க எல்லாருக்கும் (நிருபர்கள்), நீங்க என்னை பார்க்க வந்ததற்காக” என்று தெரிவித்தார்.
ஒன்னுமேயில்லை
கமலிடம் நிருபர்கள் கேட்டபோது, “அதெல்லாம் ஒன்னுமில்லை. அங்கதான் இருக்கிறார் (சிவகார்த்திகேயன்). இப்போதான் பை, பை சொல்லிவருகிறேன்” என்று கூறிவிட்டு நிருபர்களின் அடுத்த கேள்விக்கு வாய்ப்பு தராமல் அங்கிருந்து அவசரமாக ஓட்டமும், நடையுமாக நகர்ந்தார்.
இருவேறு கருத்துகள்
சிவகார்த்திகேயன் தன்மீது தாக்குதல் நடந்தது உண்மைதான் என்றும், தான் நலமாக இருப்பதாகவும் மட்டுமே கூறியுள்ள நிலையில், கமலோ, அதெல்லாம் ஒன்னுமில்லை என்று தாக்குதலே நடக்கவில்லை என்பது போல கூறிவிட்டுச் சென்றார்.
சிவகார்த்திகேயன் டென்ஷன்
இரு நடிகர்களுமே, நிருபர்களின் கேள்விக்கு பதிலளிக்காமல், நழுவி ஓடுவதிலேயே குறியாக இருந்தனர். தாக்குதலை ஒப்புக்கொண்ட சிவகார்த்திகேயன், ஏன் அந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்ற கேள்விக்கு பதிலளிக்காமல், முகத்தில் ஒருவித டென்ஷனோடு நிருபர்களிடமிருந்து அவசரமாக நகர்ந்தார்.
கமலும் எஸ்கேப்
“தாக்குதல் நடந்ததற்கு வீடியோ ஆதாரம் உள்ளதே, நீங்கள் நடக்கவில்லை என்று கூறுகிறீர்களே” என்று கமலிடம் நிருபர்கள் கேட்க முயன்றபோது, அவர் நிற்காமல் சென்றுவிட்டார். இவ்விரு நடிகர்களின் பரபரப்பும், உள்ளே ஏதோ பிரச்சினை நீருபூத்த நெருப்பாக இருப்பதை உறுதி செய்கின்றன.