வீட்டு உரிமையாளரின் 7 வயது மகனை சுமார் மூன்று மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக 17 வயது சிறுவனை புனே போலீசார் கைது செய்துள்ளனர். டிவி க்ரைம் நிகழ்ச்சி ஒன்றின் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
புனேயில் பன்கூர்நகர் பகுதியில் வசித்து வரும் குடும்பம் ஒன்று, கடந்த வெள்ளியன்று டிவியில் க்ரைம் நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் சிறுவன் ஒருவன் வீட்டு வேலைக்காரரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் தொடர்பாக கூறப்பட்டிருந்தது.
இதைத் தன் பெற்றோருடன் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த 7 வயது சிறுவன், ‘இதே போல் தானும் கடந்த 3 மாதங்களாக முன்னாள் வீட்டு வேலைக்காரர் மூலம் பாலியல் வன்முறைக்கு ஆளானதாகக் கூறினான்.
மேலும், தினமும் தன்னை குளிக்க வைக்கும் போது வேலைக்காரர் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், பின்னர் சாக்லேட் கொடுத்து நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூற வேண்டாம் எனக் கூறியதாகவும் தெரிவித்தான்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அச்சிறுவனின் பெற்றோர், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் நேற்று 17 வயதுடைய அந்த முன்னாள் வேலைக்காரச் சிறுவனைக் கைது செய்த போலீசார், அவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவர்கள். எனவே சிறுவனைக் கவனித்துக் கொள்வதற்காகவே மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த அந்த 17 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்தியுள்ளனர். 3 மாதங்கள் மட்டுமே அச்சிறுவன் அங்கு வேலை பார்த்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.