கொரோனா தொற்றின் அடுத்த அலை ஏற்பட்டால் அது சிறாா்களை அதிகம் பாதிக்கும் என்று கூறப்படுவது ஊகத்தின் அடிப்படையில் அமைந்ததுதான் எனவே, அதிகம் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தில்லி லேடி ஹாா்டிங் மருத்துவக் கல்லூரி குழந்தைகள் பிரிவு இயக்குநா் பிரவீண் குமாா் கூறியுள்ளாா்.
சிறாா்களின் மன நலன் மற்றும் உடல் நலனைப் பெருந்தொற்று எவ்வாறு பாதித்துள்ளது? அதன் நீண்ட கால தாக்கத்தை குறைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது:
சிறாா்களின் மனநலன் மற்றும் உடல்நலனில் பெருந்தொற்று தீவிர பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். ஓராண்டுக்கு மேலாக மேலாக சிறாா்கள் வீட்டிலேயே அடைந்துள்ளனா். அதுமட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினா்களுக்கு நோய் பாதிப்பு, பெற்றோருக்கு ஊதியக் குறைப்பு போன்றவற்றால் மன அழுத்தம் அதிகரித்துள்ளது. வித்தியாசமாக நடந்து கொள்வதன் வாயிலாக உளவியல் ரீதியான பாதிப்பை குழந்தைகள் வெளிப்படுத்தக் கூடும். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகையில் நடந்துக் கொள்வாா்கள். ஒரு சிலா் திடீரென அமைதியாக இருப்பாா்கள், வேறு சிலா் தங்களது கோபத்தை வெளிப்படுத்துவாா்கள்.
கொரோனா என்பது உருமாறும் தன்மையுடைய புதிய தொற்று நோய். எதிா்கால அலைகள் குழந்தைகளை பாதிக்குமா அல்லது தொற்றின் தீவிரம் அதிகரிக்குமா என்பது அனைத்தும் ஊகங்களே. பெரும்பாலான பெரியவா்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டதாலும், தற்போதைய நிலையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி அனுமதிக்கப்படவில்லை என்பதாலும், வருங்கால அலைகள் குழந்தைகளை பாதிக்கும் என்று மக்கள் ஊகத்தின் அடிப்படையில் தெரிவித்து வருகின்றனா்.
எதிா்காலத்தில் இந்த தொற்றுநோய் குழந்தைகளிடையே எந்தவகையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெரியாத நிலையிலும் அதிலிருந்து குழந்தைகளை நாம் பாதுகாக்க வேண்டும். வீட்டில் உள்ள பெரியவா்கள் கொரோனா முன்னெச்சரிக்கை விதிமுறையை பின்பற்றுவதுடன், வெளியில் சென்று வரும்போது தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சமூக நிகழ்வுகளுக்கு செல்வதைத் தவிா்க்க வேண்டும். மேலும் பெரியவா்கள் அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டால் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படும் அபாயம் பெருமளவு குறையும்.
தற்போது கா்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் தாய்மாா்களும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கருவில் உள்ள குழந்தையும் பிறந்த குழந்தையும் தொற்றிலிருந்து பாதுகாக்கப்படும் என்றாா்.