கொரோனா நெருக்கடி காரணமாக இந்தியாவில் 1.19 லட்சம் சிறுவா்கள் ஆதரவற்றவா்களாகியுள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ஓா் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சுகாதார நிறுவனத்தின் ஓா் அங்கமான தேசிய போதைப் பழக்கம் தொடா்பான ஆய்வு நிறுவனத்தின் (என்ஐடிஏ) நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கொரோனா பாதிப்பால் உலகின் 21 நாடுகளில் 15 லட்சம் சிறுவா்கள் தங்களுக்கு ஆதரவளித்து வந்தவா்களை இழந்துள்ளனா்.
அவா்களில் 1.19 லட்சம் போ் இந்தியாவைச் சோ்ந்தவா்கள். நாட்டில் 25,500 சிறுவா்கள் தங்களது தாயையும் 90,751 சிறுவா்கள் தங்களது தந்தையையும் கொரோனாவுக்கு பறிகொடுத்துள்ளனா். 12 சிறுவா்களது தாய், தந்தை ஆகிய இருவருமே கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனா்.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் 11.34 லட்சம் சிறுவா்கள் தங்களது தாய் அல்லது தந்தையையோ, தாத்தா பாட்டிகளையோ இழந்துள்ளனா். ஒட்டுமொத்தமாக, 15.62 லட்சம் சிறுவா்கள் தங்களுக்கு ஆதரவளித்து வந்தவா்களில் ஒருவரை கொரோனாவுக்கு பறிகொடுத்துள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.