அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவிருப்பதாக நடிகை கஸ்தூரி தகவல் பகிர்ந்துள்ளார்.
பிகில் படத்துக்கு பிறகு ஹிந்தி நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் அட்லி. நீண்ட நாட்களுக்கு முன்பே இந்தப் படம் குறித்து அறிவிக்கப்பட்டும், இதுபற்றி மேற்கொண்டு எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தில் நயன்தாரா நடிப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஏற்கனவே அட்லி – நயன்தாரா இணைந்து பணியாற்றிய ராஜா ராணி பிகில் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தன. இதனையடுத்து மீண்டும் இருவரும் ஷாருக்கான் படத்துக்காக இணையவிருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் இதுகுறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இல்லை.
இந்த நிலையில் இன்று மீண்டும் இந்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்த முறை ரசிகர்கள் மட்டுமல்லாமல் சில பிரபலங்களும் நயன்தாராவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கஸ்தூரி தனது சுட்டுரையில், பக்ரீத் நாளில் ஒரு முக்கிய செய்தி, வெற்றிக்கூட்டணியான ஷாரூக்கான், நயன்தாரா அட்லீ, ஏ.ஆர்.ரஹ்மான் இணையவிருக்கின்றனர். ஒரே படத்தில் எனக்கு விருப்பமான அனைவரும் நடிக்கின்றனர் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.