மூளை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல சின்னத்திரை நடிகை சரண்யா சசி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
தமிழில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ´பச்சை என்கிற காத்து´ என்ற படத்தில் நடித்தவர் நடிகை சரண்யா சசி. இவர் மலையாளத்தில் ஏராளமான படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு மூளை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு 11 முறை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் அவருக்கு நோய் முற்றிலும் குணமாகவில்லை. அவரது மருத்துவ செலவுகளுக்காக நண்பர்கள் மற்றும் சின்னத்திரை நடிகர் சங்கம் தொடர்ந்து உதவி செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மே மாதம் அவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை மோசமடைந்ததையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி இன்று (செவ்வாய் கிழமை) உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.