அமிதாப் பச்சனின் காவலராக 5 ஆண்டுகள் பணிபுரிந்த ஜிதேந்திர ஷிண்டே, அதிக வருமானப் புகார் காரணமாக இடம் மாற்றம் செய்யப்பட்டார்.
ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனுக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் பாதுகாவலராக இருந்தவர் ஜிதேந்திர ஷிண்டே. காவல்துறையில் தலைமைக் காவலராக பணிபுரியும் இவர், அமிதாப் பச்சனுக்கு தொடர்ந்து 5 ஆண்டுகள் சிறப்பான முறையில் பாதுகாப்பு அளித்து வந்துள்ளார். மேலும், அமிதாப் பச்சனின் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்து வந்துள்ளார்.
இதன் காரணமாக ஜிதேந்திர ஷிண்டேவுக்கு அமிதாப் பச்சன் அவ்வப்போது பணம் கொடுத்துவந்துள்ளாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜிதேந்திர ஷிண்டேவின் வருமானம் 5 ஆண்டுகளில் ரூ.1 கோடியே 50 லட்சம் அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதுகுறித்து பல்வேறு இணையதளங்களில் தொடர்ந்து செய்திகள் வெளியான வண்ணம் இருந்துள்ளன. இதனையடுத்து ஜிதேந்திர ஷிண்டே வேறு காவல்நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
மேலும் ஜிதேந்திர ஷிண்டேவின் மனைவியின் பெயரில் நடிகர், நடிகைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் அமைப்பு ஒன்று செயல்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது.
தற்போது ஜிதேந்திர ஷிண்டேவின் வருமானம் சொத்து விபரம் கேட்டு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதன் பிறகே அவருக்கு சம்பளம் தவிர்த்து வேறு எந்தெந்த வழிகளில் வருமானம் வருகிறது என்பது தெரியவரும்.