இந்திய அணிக்காக 23 ஆட்டங்களில் விளையாடிய ஆல்ரவுண்டர் ஸ்டூவர்ட் பின்னி, ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் ஆல்ரவுண்டர் ரோஜர் பின்னியின் மகனான ஸ்டூவர்ட் பின்னி, 2014 ஜனவரியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் அறிமுகம் ஆனார். 6 டெஸ்டுகள், 14 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடினார். கடைசியாக 2016 இல் விளையாடினார்.
பங்களாதேஷூக்கு எதிராக மிகச்சிறப்பாகப் பந்துவீசி 4 ஓட்டங்கள் மட்டும் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒருநாள் கிரிக்கெட்டில் ஓர் இந்திய வீரரின் சிறப்பான பந்துவீச்சு என்கிற பெருமை அவரிடமே உள்ளது. 2015 உலகக் கிண்ணத்துக்குத் தேர்வானாலும் அவருக்கு ஓர் ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஐபிஎல் போட்டியில் மும்பை, ராஜஸ்தான், ஆர்சிபி அணிகளுக்காக விளையாடியுள்ளார்.