நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் சுட்டுரை பக்க பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் உடல்நலப் பிரச்னையின் காரணமாக தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறாா். சமீபத்தில் அவருடைய பிறந்த தினத்தின்போது வெளியிட்ட அறிக்கையில் சிகிச்சை பெறுவதற்காக விரைவில் வெளிநாடு செல்ல உள்ளதாக அறிவித்திருந்தாா்.
அதன்படி, கடந்த திங்கள்கிழமை காலை மகன் சண்முக பாண்டியனுடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து துபை சென்றாா்.
தொண்டையில் தொற்று, நடைபயிற்சி உள்ளிட்டவற்றுக்காக துபையிலேயே தங்கி சிகிச்சையை எடுத்து வரும் விஜயகாந்த், நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரை பக்க பதிவில் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ள பதிவில், “நான் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன். நான் நடித்த ´சத்ரியன்´ திரைப்படத்தை, எனது சிகிச்சைக்கு உதவிபுரியும் செவிலியர் சகோதரிகளுடன் பார்த்த போது எடுத்த படம்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். கால் மேல் கால் போட்டுக்கொண்டு கெத்தாக அமர்ந்துகொண்டு செல்லிடபேசியில் திரைப்படம் பார்க்கும் புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.